Get Nandalaalaa atom feed here!

Saturday, May 28, 2005

எது உண்மை? சதியா? தற்கொலையா?

கடந்த சில தினங்களாக ஊடகங்களில், உத்தரபிதேசத்தை சேர்ந்த ராம்குமாரி என்பவரின் மரணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனைத்து ஊடகங்களும், ஒரே விதமாக, ராம்குமாரி தானே வலிய சென்று தன் கணவனின் பிணம் எரியும் சிதையில் விழுந்து "தற்கொலை" செய்து கொண்டார் என்றே எழுதிவருகின்றன. உத்தரபிதேச அரசும் அவ்வாறே கூறி வருகிறது.

அவரின் குடும்பத்தாரும், ராம்குமாரியின் கணவர் ஜோகேஷ்வர் திவாரியின் சிதைக்கு தீ வைத்துவிட்டு வந்தபின்பு, அவரை காணாமல் தேடியபோது, அவர் ஏறக்குறைய முழுதாக எரிந்த நிலையில் கணவரின் சிதையில் கிடப்பதை கண்டுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் செய்தி தெரிவிக்க சென்ற ராம்குமாரியின் மகனை, அங்கிருந்த காவலர்கள், புகாரை பதிவு செய்யாமல் விரட்டி விட்டதாகவும், இது பற்றி வெளியே தெரிவிக்க கூடது என மிரட்டியதாகவும், பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

இம்மாதம் 7ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ள போதும், அதுபற்றிய செய்தி எதுவும் உடனடியாக வெளியே தெரியவில்லை.

இறந்தவர்களின் 13ம் நாள் நினைவை கொண்டாடும் விதமாக, வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தேங்காய், பூ, ஊதுவத்திகளுடன் சதி நிகழ்ந்ந்த இடத்தில் சதி மதா வழிபாடு செய்யத்துவங்கினர்.

உத்தரபிரதேச ஆளும் கட்சியான சமஜ்வாடி ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சரும் ஆன ஜமுனா பிரசாத் போஸ் என்பவர் சதி மாதா ஆலயத்திற்கு சென்று, சிதையை சுற்றி வந்து வழிபட்டு, பின்னர், பிணம் எரித்த சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றுள்ளார்.

இப்படியாக பரபரப்பான சம்பவங்கள் நடக்க துவங்க, இச்சம்பவம் ஊடகங்களின் கவனத்தை பெற்று, இந்த வாரம் தான் வெளியுலகிற்கு செய்தியாக வெளியாகியது.

அதை தொடர்ந்து செயலில் இறங்கியுள்ள உத்தரபிரதேச அரசு, சதி நடந்த இடத்தில் பூஜைகள் நடத்துவதை தடை செய்து, அங்கே அதிக எண்ணிக்கையிலான காவலர்களை நிறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், உத்தரபிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.

மாநில காவல்துறையின் உயர் அதிகாரி வி எஸ் பாண்டே, "இது சட்டப்படி சதி என்ற வரையரைக்குள் வராவிட்டாலும் கூட, மாவட்ட காவல் கண்கானிப்பாளரை நேரடி விசாரணையை மேற்கொள்ளும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சதிக்கு தூண்டுதல் மற்றும் சதியை போற்றுதல் இரண்டும் சட்டப்படி தவறு. ஆனால், ராம்குமாரி மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் உடன்கட்டை ஏறவில்லை, தானாகவே சென்று சிதையில் விழுந்துள்ளார். எனவே இது சட்டப்படி சதி இல்லை. இப்போது இதை சதியாக போற்றி நடத்தப்படும் பூஜைகள் தடுத்து நிறுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி பற்றி மாவட்ட நீதிபதி தீரஜ் சாகு கூறுகையில், "இது நிச்சயம் சதி தான், ஆனால் ராம்குமாரி யாருடைய பலவந்தம் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் உடன்பாட்டுடனோ இதில் ஈடுபடவில்லை. இந்நிகழ்விற்கு நேரடி சாட்சியமும் இல்லை எனவே யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது" என்கிறார்.

மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஜாக்கி அஹ்மட், "இந்நிகழ்ச்சி சாதாரண தற்கொலை தான். ஊடகங்கள் பரபரப்புக்காக, அளவுக்கு அதிகமாக இதை பெரிது படுத்துகின்றன" என்கிறார்.

ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து, ராம்குமாரி, தன் கணவர் இறந்துவிட்ட சோகத்தில், தான்னை மாய்த்துக்கொள்ளும் முடிவுடன், மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, எறிந்து கொண்டிருந்த தன் கணவனின் சிதையில் விழுந்து, தன்னுயிரை போக்கிக்கொண்டுள்ளார். ஆக இது ஒரு தற்கொலை மட்டுமே. சதி என்கிற, அரசின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மதச்சடங்கல்ல என்று முடிவுக்கு வருமுன், சற்று பொறுங்கள்.
(தொடரும்)

Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 24, 2005

புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!

மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற பெண்.

இவர் எதேனும் அரசியல் கட்சியை அல்லது இயக்கத்தை சார்ந்தவரோ, வேறு ஏதேனும் பாரிய பின்புலம் உள்ளவரோ கிடையாது. மிகச்சாதாரண குடும்ப பின்னணி கொண்ட மாலத்தீவு குடிமகள் என்பதை தவிர இவரைப்பற்றி சொல்ல பெரிதாக எதுவும் கிடையாது, மூண்றாண்டுகளுக்கு முன் வரை.

மாலத்தீவு அரசாங்கத்தை விமர்சிக்கும் 'சந்தனு' என்ற மின்மடல் செய்தி குழுவுக்கு, செய்தியாளாராக செயல்பட்டதாக நிஸ்ரின் மீது குற்றம் சாட்டியது மாலத்தீவு அரசாங்கம்.

அதனடிப்படையில், வன்முறையை தூண்ட முயற்சித்ததாகவும், மாலத்தீவு அரசாங்கத்தை அவதூறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டி, மூன்றாண்டுகளுக்கு முன் கைது செய்ப்பட்டார் பத்திமத் நிஸ்ரின். இதே குற்றச்சாடுக்களுக்காக, மொகமட் ஜாக்கி, இப்ரகிம் லுத்தஃபி, அகமட் திதி என்ற மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது மாலத்தீவு அரசாங்கம்.

மாலத்தீவு

அரபிக்கடலில், இந்தியாவிற்கு 600 கி.மீ தெற்கே உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது மாலத்தீவு. புத்தமதத்தை பின்பற்றி வந்த மாலத்தீவில், கி.பி 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவியது. அதை தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சி முறையில் சுல்தான் மற்றும் சுல்தானா க்களால் ஆளப்பட்டு வந்தது.

16ம் நூற்றாண்டின் நடுவில் சில காலம் போர்த்துகீசியர்களால் ஆளப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் சிறிது காலம் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இறுதியாக, 1756ல், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் வந்து, 1965ல் சுதந்திரம் பெற்றது.

பின்னர் அதுவரை இருந்துவந்த சுல்தானை ஆட்சியாளராக கொண்ட அரசமைப்பு முறை மாற்றப்பட்டு, குடியரசாக மாறியது, முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாலத்தீவு.

நிரந்தர(?) அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்

Maumoon Abdul Gayoom1968ல் இக்குடியரசின் முதல் அதிபராக இப்ரகிம் நசீர் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 1978ல் மவ்முன் அப்துல் கய்யூம் அதிபரானார். ஆறு முறை தேர்தலில் வென்று இன்று வரை அதிபராக தொடர்கிறார்.

மாலத்தீவின் அதிபர் தேர்தல் என்பது, பலர் போட்டியிடும் தேர்தல் முறையல்ல. மஜ்லீஸ் எனப்படும் மாலத்தீவின் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, ஆம் / இல்லை என்ற வாக்கின் மூலம் மக்கள் அங்கீகரிக்கவேண்டும். இவ்வகையில் மக்கள் அங்கீகரித்து விட்டால் அவரே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிப்பார்.

மக்களுக்கு, தாங்கள் விரும்பிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற, மக்களை பிரதிநிதிப்படுத்தாத இத்தகைய தேர்தல் முறை மூலம், மாலத்தீவு அரசாங்கம், 1978லிருந்து அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்-ன் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ஆயுத புரட்சியும், மாலத்தீவுக்கு இந்தியாவின் உதவியும்

இலங்கையில் தொழில் புரிந்து வந்த மாலத்தீவினை சேர்ந்த அப்துல்லா லுத்தீஃபி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) அமைப்பினர் துணையுடன் 1988ல் மாலத்தீவை கைப்பற்ற முயன்று, ஆயுத புரட்சியை மேற்கொண்டார். அவ்வமயத்தில் மாலத்தீவின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்கவிருந்த கய்யூம் இந்தியாவின் உதவியை நாடினார்.

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த இராஜீவ் காந்தி, உடனடியாக 1600 படை வீரர்களை அனுப்பி, புரட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்க கய்யூமிற்கு உதவினார்.

அன்றிலிருந்து இந்திய அராசாங்கத்துடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் கய்யூம். இந்திய அரசும் அவருக்கு ஆதரவான நிலையை கொண்டிருப்பதால், அவரின் அரசியல் அடக்குமுறையை நிறுத்த வேண்டி எந்த அழுத்தத்தையும் அவருக்கு கொடுப்பதில்லை.

அதிகார அடக்குமுறை ஆட்சி

தனக்கு எதிராக எழும் எந்த சலனத்தையும் அடக்கி வெற்றி கொள்ள கய்யூம் அனைத்து வழிகளையும் கையாண்டு வந்துள்ளார். அவற்றில் கொடூரமானது, அரசியல் எதிர்ப்பை சமாளிக்க அவர் உபயோகிக்கும் இராணுவ பலப்பிரயோகம் தான்.

என்.எஸ்.எஸ் என்ற இராணுவ அமைப்பை தனது தனிப்பட்ட கூலிப்படையைப் போலவே பயன்படுத்தி வருகிறார் அதிபர் கய்யூம். தனக்கெதிராக எழும் அரசியல் எதிர்ப்புகளை, நாட்டுக்கெதிரான வன்முறையாக சித்தரித்து, அவர்களின் மேல் என்.எஸ்.எஸ்-ன் வன்முறையை ஏவி விடுகிறார்.

கய்யூமின் அரசியல் எதிர்ப்பாளர்கள் பலர், என்.எஸ்.எஸ்-ஆல் கைது செய்யப்பட்டும், அவர்களின் கொடும் சித்ரவதைக்கு உள்ளாகியும், ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவித்தும் வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் பலர் காணாமலே போய் விடுவதும் அந்நாட்டில் சாதாரணமே.

மாலத்தீவில், சரியான சட்ட அறிவு இல்லாதவர்கள் கூட கய்யூம் அரசினால் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே அங்கே நீதி பரிபாலனம் செய்யப்படுவது இன்னொரு கேலிக்கூத்து.

என்.எஸ்.எஸ் படையினர், அதிபர் கய்யூமையும், அல்லாவையும் ஒன்றிணைந்த தலைவர் என கொண்டுள்ளனர். இது இஸ்லாமியர் மத்தியில் பலத்த ஆட்சேபத்தை எழுப்ப வல்லது. ஆனாலும், கய்யூமின் சர்வாதிகாரத்தினால், அக்குரல்கள் அமுக்கப்படுவதால், ஆட்சேபம் வெளியே தெரிவதில்லை.

இன்றுவரையில் மாலத்தீவில் அவசரநிலை சட்டங்களே நடைமுறையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதி(?) விசாரணையும் தீர்ப்பும்.

நிஸ்ரின் உள்ளிட்ட நால்வர் மீது, சில மாதங்கள் விசாரணைக்கு நடைபெற்றது. இறுதியில், 2002 மே மாதம், பத்திமத் நிஸ்ரினுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ஏனையோருக்கு ஆயுள் (முழுமைக்குமான) சிறையும் தண்டணையாக விதிக்கப்பட்டது.

விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குரல் எழத்தொடங்கி, சர்வதேச அரங்கில் கவனம் பெறத் தொடங்கியது. மனித உரிமை அமைப்புகள் மாலத்தீவு அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தன. ஆயினும் விசாரணை முறையாக நடைபெற்றதாகவும், விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாகவும் கூறி வந்தது மாலத்தீவு அரசு.

மனித உரிமை அமைப்புகள், மாலத்தீவு அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து, தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை அடுத்து, அய்ரோப்பிய ஒன்றியம், மாலத்தீவு அரசு அலுவலர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்ய முடிவெடுத்தது. இவ்வாறாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்க தொடங்கவும், அதிபரின் பொது மன்னிப்பு என்ற பெயரில் பத்திமத் நிஸ்ரினை இம்மாதம் விடுதலை செய்துள்ளது கய்யூம் அரசு. மற்ற மூவருக்கான தண்டனையில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.

விடுதலையாகியுள்ள நிஸ்ரின் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கும்போது, மாலத்தீவில் 'ஜனநாயகம்' என்ற பெயரில் நடைபெற்று வரும் கொடூரக்கூத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.

உண்மையில், நிஸ்ரின் செய்தது, மாலத்தீவில் தொடர்ந்து நிலவி வரும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை விமர்சித்து, சந்தனுவுக்கு ஒரு மின்மடல் அனுப்பியது மட்டுமே. மற்றபடி அவர் சந்தனுவின் செய்தியாளராகவோ அல்லது வேறு எந்த சதியிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிஸ்ரின் அடைக்கப்பட்டது, போதைமருந்து குற்றவாளிகளுக்கான சிறையில். வாதாட வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் அடிப்படை உரிமை கூட இவருக்கு மறுக்கப்பட்டது. கைகளை விலங்குகளால் பிணைத்து, கண்களை கட்டி, தாக்கி கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். கைதிகளின் ஆடையை அவிழ்த்து பாலியல் துன்பத்துக்கு உள்ளாக்குவது கூட, மாலத்தீவில் வெகு சாதாரனம். நிஸ்ரினை, அவரது குடும்பத்தினரால் கூட சுலபமாக சந்திக்க அனுமதிக்காமல் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இவருக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் இல்லாத நிலையிலேயே, குற்றச்சாட்டு நிரூபனமாதாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரையில், மாலத்தீவு அரசாங்கத்தின் மீது, மனித உரிமைக்கு எதிரான ஒடுக்குமுறை குற்றச்சாட்டு எழும்போதெல்லாம், இஸ்லாமிய தீவிரவாதம் தங்கள் நாட்டில் தலையெடுப்பதை தவிர்க்கவே இத்தகைய கடும் போக்கினை மேற்கொள்வதாக கய்யூம் கூறி வந்ததை, மேற்கத்திய நாடுகள் அப்படியே ஏற்றுக்கொண்டு வந்துள்ளன.

இப்போது பத்திமத் நிஸ்ரின் அடக்குமுறையை சந்தித்து, அதை துணிவுடன் எதிர்கொண்டு போராடி, இறுதியில் வெற்றி கண்டு, அதிபர் கய்யூமின் சர்வாதிகார போக்கை உலக அரங்கில் தோலுரித்துள்ளார்.

இனி மாலத்தீவின் ஆட்சி அதிகாரம் மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல துவக்கமாக இது அமையக்கூடும். அதிபர் கய்யூமின் சர்வாதிகாரத்துக்கும் ஒரு முடிவு எட்டப்படக்கூடும்.

அவ்வகையில், பத்திமத் நிஸ்ரின் ஒரு புரட்சி பெண்தான்.




ஜெனிபர் லதீஃப்: நடிப்பு கலைஞர், உரிமை போராளி என பன்முகம் கொண்ட ஜெனிபர் லதீஃப், மாலத்தீவில் கய்யூமின் அடக்குமுறையை எதிர்த்து போராடி வரும் பெண்களில் முதன் மையானவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர்.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 17, 2005

தினமணி: வாலறுந்த நரியின் ஊளை.

வர்ணாசிரமம் என்பது வெறும் புனைவில்லை. ஒரு "பரிணாம மானுடவியலார்" நூறு ஆண்டுகளுக்கு முன்பே "வியப்பூட்டும்" இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மனித இனம் நான்கு வர்ணங்களாக பிரிந்திருக்கின்றன.
இதற்கு வேத சாஸ்திரமோ, மதமோ காரணமில்லை.

இப்படி சொல்கிறார் ஆஸ்திரிய நாட்டு பரிணாம மானுடவியலார் ஹஸ்கி.

"மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என அறுதியிட்டு கூறி "அந்த பாகுபாட்டை நிலைப்படுத்துவதில் ஜீன்களும் முக்கியமான பங்கு பணியாற்றியுள்ளன" எனவும் உறுதிப்படுத்துகிறார் திரு. கே.என்.ராமச்சந்திரன் என்பவர், தினமணியில் இது பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையில்.

"அந்த நிலை கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது"

600 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பிரிவினை இருந்ததற்கு ஆதரம் உள்ளது போல் போகிறது இந்த கட்டுரை.
"மக்கள் பிற நாடுகளுக்குக் குடிபெயர்வது அதிகமான பிறகே ஜீன் கலப்பும் வர்ணக் கலப்பும் ஏற்பட்டு அந்தப் பிரிவினை கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டது."

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மிகப்பெரிய விந்தை இது. அதை யாருமே இதுவரை கண்ணுறாதது அதைவிட மேலான ஒரு விந்தை.

மரபணுவின், வேறு ஏதேனும் ஒரு பண்பு, இதைப்போல வெறும் 600 வருடங்களில் காணாமல் போனதாக ஏதாவது ஒரு நிரூபணம் இருக்கிறதா?
முக்காடில்லா முழுப் பொய்யை, இப்படி ஒரு திரிப்பை எழுத இவரைத் தவிர வேறு யாரால் முடியும்?

"ஆனாலும் சில சமூகங்களின் ஒட்டுமொத்தமான நடத்தைகளையும் குணாதிசயங்களையும் ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது அந்த வர்ணாசிரமப் பிரிவுகளின் பிறவிப் பண்புகளின் கூறுகளை அடையாளம் காண முடிகிறது என்று ஹஸ்கி கூறுகிறார்."


எந்தெந்த சமூகம்?
என்னவிதமான நடத்தைகள் பரீசிலிக்கப்பட்டன?
ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது - எப்படி?
எந்த தகவலும் இல்லை!

"ஆனாலும் டார்வினின் பரிணாமக் கொள்கைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னால் லாமார்க் என்ற பிரஞ்சு விஞ்ஞானியும் லைசங்கோ என்ற ரஷிய விஞ்ஞானியும் வெளியிட்ட தவறான மரபியல் கருத்துகள் ஓரளவுக்கு ஹஸ்கியின் கருத்துகளை ஆதரிப்பவையாக இருந்தன. மெண்டல் தாவரங்களில் மரபு மாற்றங்களை ஏற்படுத்தி உயர் ரகத் தாவரங்களை உருவாக்கியதைப் போல மனிதர்களிலும் அதே போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உயர்தரமான மனிதர்களை உருவாக்க முடியுமென்று லைசங்கோ வாதித்தார்."


புல்லரிக்கவில்லை உங்களுக்கு?
லாமார்க் மற்றும் லைசங்கோவின் தவறான மரபியல் கருத்துக்களை, அதுவும் ஓரளவே ஒத்துப்பொனதை வைத்து ஹஸ்கியால் புனையப்பட்ட ஒரு கற்பனைக்கு, இவர்கள் புது விளக்கம் ஒன்றை இப்போது தருவதேன்?

"ஜெர்மனியில் நாஜி கட்சியினர் மற்ற மனித இனங்களை விட ஜெர்மானியர்கள் உயர்தரமானவர்கள் என்று பிரசாரம் செய்து இனத்துவேஷ நச்சைப் பரப்பியதற்கும் ஹஸ்கியின் கொள்கையும் ஓரளவுக்குக் காரணமாய் அமைந்தது."


600 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து போன ஒன்று, எப்படி சென்ற நூற்றாண்டில், மறுபடி திடுமென தலைக்காட்டியது? இப்படி கேட்டால் அது பசப்பு பகுத்தறிவாதமாக இவர்களுக்கு தோன்றும்.

இனத்துவேஷ நச்சை பரப்ப உதவிய கொள்கையென்று இதை ஒப்புக்கொள்ளும் ஒன்றை, மீண்டும் இவர் கட்டியெழுப்ப காரணமென்ன? கொஞ்சமாய் புரிகிறதா? பனிக்கட்டி முனை தான் இது.

சரி ஹஸ்கியின் நால் வர்ணம் என்பது என்ன?
அதை அடுத்து விளக்குகிறார்.

[முதல் வர்ணம்:]
"ஹஸ்கியின் கருத்துப்படி கிரீஸ், மெசபடோமியா, கங்கைச் சமவெளி, பாபிலோன் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பில் வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின. அப்பகுதி மக்கள் உலகின் ஆசிரியர்களாகவும் நெறியாளர்களாகவும் இலக்கியப் படைப்பாளிகளாகவும் விளங்கினார்கள். அவர்களைப் பேரறிவாளர்கள் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்."


[இரண்டாம் வர்ணம்]
"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வசித்த நார்மன்களும் ஆங்கிலோ சாக்சன்களும் வைக்கிங்குகளும் தென் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்த மங்கோலியர்களும் போர்க்குணமும் முரட்டுத்தனமும் மிக்கவர்கள். சதாசர்வ காலமும் பிற நாடுகளின் மேல் படையெடுப்பதும் கொள்ளையடிப்பதுமே அவர்களுடைய வாழ்வியல் நெறி. அவர்களை ஹஸ்கி கொள்ளையர்கள் எனக் குறிப்பிடுகிறார்."


[மூன்றாவது வர்ணம்]
"கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனா, கொரியா, இந்தோசைனா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் வசித்த மக்கள் விவசாயம், வர்த்தகம், கைவினைத் தொழில்கள் ஆகியவற்றில் முனைப்புடனிருந்தார்கள். இன்றளவும் கூட அப்பகுதிகள் விவசாய உற்பத்தியிலும் கைவினைப் பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகின்றன. அவர்களை ஹஸ்கி உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்துகிறார்."


[நான்காம் வர்ணம்]
"கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார். அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன. அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான். ஆப்பிரிக்கர்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்த அரபுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அது சாதகமான கருத்து. விலங்கு நிலையில் இருந்த கறுப்பர்களை மேம்படுத்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வைப்பது மத சம்மதமுள்ளதே என்று அவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்க ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."


இந்த நான்கு பிரிவுகளிலும், இந்திய துணைக்கண்டம் பற்றி ஒரு இடத்தில் வெளிப்படையாக வருகிறது. அது கங்கை சமவெளியில் வாழ்ந்தவர்கள் பற்றி. அவர்களை முதல் வர்ணம் என்றும், அங்கே "வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின." என்றும் எழுதியாயிற்றா?

இந்தியாவின் மற்ற பகுதிகள்?
அவை அனைத்தையும் நான்காவது வர்ணத்தில் சேர்க்கிறார்.
கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்
இந்தியாவின் மற்றவர்கள்? கருப்பர்களும், ஆதிவாசிகளும்.
இவர்களின் குணமாக கூறப்படுவது:
அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன

இவர்களை என்ன செய்வது என்றும் கூறுகிறார்:
அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான்.

இவர்களை அடிமைப்படுத்தி மலம் அள்ள வைப்பதில் என்ன தவறிருக்க முடியும்?
அது தானய்யா அவர்களுக்கு பாதுகாப்பு என்கிறார்.
பனிக்கட்டி பாதி தெரிகிறதா இப்போது?

"ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை"

இப்படி காலங்காலமாய் நடந்தேறிய வன் கொடுமையை, நடத்திய கூட்டத்துக்கு எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. அப்படி குற்ற உணர்வு இல்லாவிட்டால் தானே, மேலும் மேலும் அடிமைப்படுத்தி மலம் தின்ன வைக்க முடியும்.

அதுவும் மலத்தை தன் கையால் தொடுவதா?
மலத்தை திணிக்க ஒரு சாதி, திண்ண ஒரு சாதி.
இவர்களுக்கு தனித் தனி வீதி.

போதுமா?
பனிக்கட்டி மனுவின் கொள்கைகளாக வெளிப்பட்டு விட்டனவா?
இதை மத வாதி சொன்னால் தானே எதிர்ப்பீர்கள்?

"டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."

ஷாக்லி கண்டுபிடித்தது டிரான்சிஸ்டர். அவர் ஒரு மின்னணுவியல் விஞ்ஞானி. நோபெல் பரிசு பெற்றவர் தான். அதனால் அவரின், தன் துறை சம்பந்தப்படாத "பரிணாம மானுடவியல்" குறித்த உளரல்கள் எல்லாம் விஞ்ஞான அந்தஸ்தை பெற்று விடுமா?

நிற்க. இங்கே மேற்படி குலக்கல்வி திட்டமே அதிகப்படிதான் என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்வீரா?

இது சந்தேகமற நிருவப் பட்ட விஞ்ஞான உண்மைபோல் இவர் கூறும் இந்த கருத்துக்கு ஆதாரம் தான் என்ன?

இந்த ஹஸ்கியின் ஆராய்ச்சிகள் எந்தளவு நிரூபனம் ஆகியுள்ளன?

அதை புரட்டுரையாளர் தன் இறுதி பத்தியில் கூறுகிறார்: "ஹஸ்கிக்கு ஜீன்களை பற்றி முழுமையான அறிவு இல்லை. பிறவிக்குணங்களுக்கு மரபுக்காரணிகள் காரணமாவதை அவரால் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை."

உறுதி படுத்த முடியாததை தான் இந்த புரட்டுரையாளர் முதலில் "மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என எழுதுகிறார். தினமணியும் அதை அப்படியே பிரசுரிக்கிறது.

"ஆனால் ஹஸ்கியின் கருத்துகள் மற்ற அறிஞர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. கடுமையான பரிசோதனைகள் மூலம் அவற்றைச் சரிபார்க்க முடியாததே அதற்குக் காரணம்."

ஆகா என்னே ஒரு நேர்மை?
ஆரம்பத்தில் ஒன்றை சொல்லி, இறுதியில் அதையே மறுத்து எழுதி தன் நேர்மையை மறு நிர்மானம் செய்ய முயலுகிறார்.

இடையில் முழுமையான விஷ விதைப்பையும் நடத்தி விடுகிறார். என்ன அந்த விஷ விதைப்பு?
அது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.
அதற்கு முன்:

நிரூபனமாகாத, மறுக்கப்பட்ட கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு அவதூற்றை, உளரலை, விஞ்ஞான உண்மை போல எழுத வேண்டிய கட்டாயம், இந்த புரட்டுரையாளருக்கு இருக்கலாம்.

இதை பிரசுரிக்க வேண்டிய அரிப்பு தினமணிக்கும் இருப்பதும் இப்போது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

இந்த புரட்டுரையின் இறுதி கருத்து என்ன தெரியுமா?
அது தான், இவர்களின் கட்டாயம், அரிப்புக்கான சொறிதல், எல்லாம்.

>2000 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற இனத்தவர்களால் அடக்கி ஒடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகும் யூதர்கள் தமது பேரறிவுத் திறனை இழந்து விடவில்லை. பெரும் எழுத்தாளர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளும் யூத இனத்தில் அதிகமாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் உடலுழைப்பை விட அதிக அளவில் அறிவுத் திறனையே பயன்படுத்தி மேநிலைக்கு உயர்வார்கள்.


மேலே உள்ளவற்றில் யூதர்கள் என்பதை எடுத்துவிட்டு வேறொன்றை வைத்து பாருங்கள். புரிகிறதா?

"இன்னும் 2000 வருடங்கள் ஆனாலும் நாங்க அடங்க மாட்டொம்டா. யூதனுங்க போலடா நாங்க"ன்னு சொல்ல வர்றது புரியல?
இது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.


விஞ்ஞானத்தின் வேரை வேதத்தில் காட்டி முட்டாளடிக்கும், சதியின் அடுத்த கட்டமாக, வேதம் கட்டப்பட்டுள்ள, அதன் அடித்தளமான விஷத்துக்கு விஞ்ஞான விளக்கம் தர முற்பட்டுள்ளன, இந்த வாலறுந்த நரிகள்.

வேதம் தந்த அதி அற்புத வர்ணாசிரம தத்துவ விஷம், விஞ்ஞான நிரூபனம் என்றாகி விட்டால் இதுகளுக்கு வேறு என்ன வேண்டும்?

சங்கர மட அதிபர்களை கைது செய்தும், குமுகாயத்திலிருந்து விரட்டியடிக்கப் பட வேண்டிய ஒரு அடிப்படைவாதியை, களையெடுக்கப்பட வேண்டிய பழமை தீவிரவாதியை "தூக்கில் போடு" என்ற குரல் மக்கள் மத்தியில் ஒலித்ததே தவிர அனுதாபமோ, கோபமோ மக்களிடம் எழவில்லை. மக்களிடம் கோபத்தை எதிர்பார்த்து ஏமந்த கோமாளி கூட்டம் இப்போது அவர்களின் மீது கண்டபடி மலம் அள்ளி வீசுகிறது.

ஐம்பதாண்டு மௌனம் காத்திருந்து, தங்களை யூதர்களாக கற்பனை செய்து, தமிழர்களை இனப்படுகொலை செய்த நாசி-களுடன் ஒப்பிட்டது ஒரு வஞ்சக நரி.

"பீடத்தில் ஞானத்தை அடகு வைத்து, விலையாக விருது பெற்ற" (நன்றி:நெல்லை கண்ணன்) நன்றி கொண்ற அவர்களின் அடிமை கழுதைப்புலி ஒன்று, சோறு போட்ட மக்களையே நாய்கள் என்பதாக சொல்லி, பிணம் தின்னும் தன் புத்தியை காட்டியது.

இப்போது ஊளையிட்டிருப்பது வாலறுந்த நரியா, அல்லது அதன் மற்றொரு அடிமை கழுதைப்புலியா என்பது தெரியவில்லை.

ஆனால் இதை வெளியிட்டு, வாலறுந்த புண்ணை நக்கிக் கொண்டுள்ளது தினமணி.

இடைத்தேர்தல் முடிவு புண்ணுக்கு மருந்தாகும் என எதிர்பார்த்தது நரிகளின் கூட்டம். ஆனால் மக்கள் மிளகாய் பொடியை தூவிவிட, இந்த புரட்டுரையை பிரசுரித்து ஆறுதல் தேடுகின்றன.


பின் குறிப்பு: இது ஒரு அவசர எதிர்வினை. இடைத்தேர்தல் முடிவுகளின் முழு விவரம் அறிய இன்று காலை இணையத்தை மேய்ந்த போது இந்த புரட்டுரை கண்ணில் பட்டு தொலைத்தது.

விபத்தின் பாதிப்பிலிருந்து முழுதும் மீளாத நிலையில், நேற்றிலிருந்து அலுவலகம் செல்ல தொடங்கிவிட்டேன். ஓய்வு எடுத்த காலத்துக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆறு மாதமாக எதிர்பாத்து காத்திருந்த ஒப்பந்தம் ஒன்று வேறு இன்று இறுதி செய்யப்பட்டது. எல்லாம் சேர்ந்து, எனக்கான தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொண்டுள்ளன. உணவு இடைவேளையை பயன் படுத்தி இப்பதிவை எழுதினேன்.(மாலை வலையேற்றிவிடுவேன்)

முன்பை போல அதிக நேரம் தமிழ்மணத்தில் செலவு செய்ய இயலாது என நினைக்கிறேன். முடிந்தளவு வாசிக்கவாவது தினம் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியுமா தெரியவில்லை.

தலாக் குறித்த பதிவிற்கு வந்த கருத்துக்களுக்கும், தனி பதிவுக்கும் பதிலளிக்க சிறிது காலமாகலாம். அதற்காக நண்பர்கள் மன்னிக்கவும்.
திண்ணை தலாக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://www.thinnai.com/pl0513057.html. அதில் வாசித்தவர்களும் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பி வருகின்றனர். அனைத்துக்குமாக சேர்த்து என் கருத்தை பிறகு தெரிவிக்கிறேன்.


இந்தப்பதிவில் நான் சாடியுள்ளது வர்ணாசிரமத்தை, வர்க்க பேதத்தை, அதை நிரந்திரமாக்கிட துடிக்கும் கயவர்களையே அல்லாது எந்த ஒரு வர்ணமாகவும்/வர்க்கமாகவும் பிறரால், பிறப்பினால் அடையாளம் காட்டப்படுபவர்களை அல்ல. அப்படி பிறப்பை மட்டும் வைத்து, அவர்களின் தனி நபர் நிலைப்பாட்டை கருத்திலெடுக்காமல் ஒருவரை/இனத்தை முழுவதும் சுட்டினால், அதுவும் ஒரு வர்க்கபேதம் பாராட்டுதலே/ வர்ணசிரம அடியொற்றுதலே என்ற புரிதல் எனக்கு உண்டு. எனவே நண்பர்கள் அந்த தெளிவுடன் இதை வாசிக்கவும். நன்றி.



நன்றி http://www.suratha.com எழுத்துரு மாற்றி.
தினமணியில் கே.என்.ராமச்சந்திரன் கட்டுரை:

தொலைந்த பதிவின் மீட்பு

19 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் இது. அப்பெண்ணை மொட்டையடித்து, நிர்வாணமாக தெருக்களின் வழியே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதிர்ச்சி தருவது, அப்பெண்ணின் குடும்பத்தினரே இதை செய்தது தான்.

பஞ்சாப் மாநிலம், பெரொசாபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது.

இப்பெண்ணை ஒருவருக்கு மணமுடித்து கொடுக்க ஏற்பாடு செய்த நிலையில், இவரது தாயார் மரணமடைந்து விட்டார்.

பின்னர் இவரது தந்தை, அதிக பணம் தருவதற்கு சம்மதித்த வேறொருவரை மணக்க சொல்லி, இப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த தந்தையும், அவர்களின் குடும்பத்தினரும், மேலே சொன்ன அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அப்பெண் காவல் துறையில் புகார் செய்த பின்பு, இரண்டு பெண்கள் உட்பட அக்குடும்பத்தினர் பத்து பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சமீபமாக அறியவந்த, பெண்களுக்கெதிரான உச்சபட்ச கொடுமைகளில் ஒன்று இது.

பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான கொடுமை, கணவன் / அவனது வீட்டாரால் இழைக்கப்படும். அல்லது வெளியாரால். இதைப் போல், பெற்றோர், அவர் தம் குடும்பத்தினரே ஈடுபடுவதென்பது, விகிதாச்சார அளவில் குறைவே.

எப்படியாயினும், அவை நான்கு சுவற்றுக்குள்ளாகவோ, மற்றவர்களுக்கு தெரியாவண்ணமோ நடத்தப்படும்.

ஆனால் இப்பெண் தன் தந்தை உட்பட, சொந்த குடும்பத்தாலேயே சகிக்க முடியாதவொரு துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், எந்த ஒளிவு மறைவுமின்றி, ஊர் நடுவிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. இதற்கு ஊர் மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி இருந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த குடும்பத்தினர், பெண்ணின் மீதான, தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டவே இப்படி ஒரு பெரும் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெளிவு.

அக்குடும்பத்தினர், "பெண் என்பவள், தந்தை, மற்றும் குடும்பத்தினருக்கு அடங்கி நடக்க வேண்டியவள், அவளுக்கு என்று தனிப்பட்ட தேர்வு என்பது இருக்கக்கூடாது, யாரை திருமணம் செய்வது என்பதை தாங்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும், குடும்பத்தார் முடிவு செய்து விட்டால், சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி ஏற்பதை தவிர, மாற்றவோ, மறுக்கவோ பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை" , என்பதான பாரத கலாச்சார காய்ச்சல் கொண்டவர்கள் என்பதும் புரிபடுகிறது.

அடிபணிதலை பெண்ணுக்கு உணர்த்த விழையும் ஆணாதிக்க குமுகத்தின் வக்கிர வெளிப்பாடு இது.

இவர்களின் அதீத கொடுஞ்செயல் அதிர்ச்சியும் வேதனையும் தந்ததே தவிர ஆச்சரியம் தரவில்லை.

இதில் அதிக வேதனையை கொடுத்தது, அவ்வூர் மக்களின் செயல்பாடு தான்.

என்ன மாதிரியான வக்கிர மனம் அவர்களது?

கண்முன்னே ஒரு பெண்ணை இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்குவதை, அனுமதிக்கும் / தடுக்க விழையாத மனம் எப்படி சாத்தியமானது அவ்வூர் மக்களுக்கு?

அப்பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டது, ஊரில் உள்ள மற்ற (தங்கள் வீட்டு)பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற சுயநலமாயிருக்குமா?

ஒருவேளை, பல நூற்றாண்டுகளாக போற்றி வந்த பெண்ணடிமை கலாச்சாரம் மீண்டும் காக்கப்படுகிறது என்ற குதூலகம் கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

எனக்கு புரியவில்லை.

நடப்பது கொடுமைதான், ஆனால் நிகழ்த்துவது அவளின் குடும்பத்தினர், எனவே தலையிட வழியில்லை என்ற எண்ணமா?

ஒரு பெண்ணுக்கு, அவளின் கணவன், தந்தை, சகோதரன், மற்ற குடும்ப உறவினர்களுக்கு உள்ள அதீத உரிமையில், அவர்களாலேயே அவள் எத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாலும், மற்றவர் தலையிடக்கூடாது எனும் நீதியா?

இதுவாக இருந்தால், எனக்கு அதிர்ச்சி கூடுகிறது.

காரணம், இத்தகைய நீதி சமீபத்தில் எனக்கும் போதிக்கப்பட்டது.

இந்த வாரம் தலாக் தலாக் தலாக் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். அதற்கு சிலர், பின்னூட்டங்களில் இப்படிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர். [பின்னூட்டங்களைவிட அதிக எண்ணிக்கையில் மின்னஞ்சல்கள் வந்துள்ளது.]

அவர்களில் பெரும்பாலோர் சொன்னது, "உரிமையை அவர்களாக கேட்கட்டும், மற்றவர்கள் தலையிட வேண்டாம்" என்பது. இவர்களில் சிலர் தாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும் தெரிவித்திருந்தனர். அது கூடுதல் வியப்பே.

இவர்கள் இடையேயான மன ஒற்றுமை, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது

இத்தகைய வக்கிர மனோபாவம், கயமை, மதங்களை, மொழி எல்லைகளை கடந்து விரவியுள்ளது அச்சம் தருகிறது. [பாதிக்கப்பட்ட பெண் சீக்கிய அல்லது இராஜ்புத் இனத்தவராக இருக்கக்கூடும்]

இது மனித மனத்தின் வக்கிரங்களின் எல்லைகளை கடந்த, மனிதம் என்ற குணங்களில் அடங்கா ஒன்றாகவே எனக்கு தெரிகிறது.

இங்கே கொடூரங்களை நிகழ்த்துபவர்கள், ஏதோ ஒரு மடத்தனமான உணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு செயல்படுகின்றனர். இதை ஒத்துழைக்க மறுத்த அடிமைக்கான ஒரு எதிர் வினையாகவும் அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளக்கூடும்.

ஆனால் வெளியிலிருந்து நோக்குபவர்கள், அந்நிகழ்வின் கொடூரத்தை உணர முடியாதது, அல்லது அதை நியாயமானதாக காண்பது எப்படி சாத்தியமாகிறது?

அவ்வூர் மக்களில் ஒருவர் கூடவா அப்பெண்ணுக்கு உதவ நினைத்திருக்க மாட்டார்? ஆனால் அவரை "இதில் தலையிட உனக்கென்ன உரிமை?" என அக்குடும்பத்தினரோ, மற்றவர்களோ தடுத்திருக்கலாம்? இப்படியான நீதியை உபதேசிப்பவர்கள் அங்கேயும் இருந்திருக்கலாம் தான்.

ஒரு தலைவர் கொல்லப்பட்டால், கொண்றவரின் மதத்திற்கெதிராய் நாடு முழுவதும் வன்செயல்கள் நடக்கிறது.

ஒரிடத்தில் இடிக்கப்படுவதற்க்கு, வேறொரு நகரில் குண்டு வெடிக்கப்படுகிறது.

ஒரு ஊரில் குண்டு வெடித்தால், நாடெங்கிலும் அதற்கு பின்னுள்ளதாக கருதப்பட்ட மதத்தினர்களை கருவறுக்கும் செயல் நடத்தப்படுகிறது.

ஒரு இரயில் பெட்டி எரிந்தால், மாநிலம் முழுக்க ஒரு மதத்தினர் மீது கொடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இப்படி ஒருபுறம் அதி தீவிரமாக, மோசமாக எதிர்வினையாற்றும் நாட்டில், மறுபுறம் கண்முன்னே நடக்கும் ஒரு கொடூரத்தை, தடுக்காமல் செயலற்று இருப்பதன் மூலம், அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் தர இவர்களால் முடிகிறது.

கல்லால் அடித்து கொல்வதையும், தலை மழித்து ஆடை அவிழ்ப்பதையும், மற்றய வன்செயலகளையும், இவர்களால், விதி மீறலுக்கான ஒரு தண்டனையாக நிறைவேற்ற / ஏற்றுக்கொள்ள முடிகிறது.

எங்கோ ஒரு இடத்தில், கொடுமைக்கு உள்ளாகுபவரை - சக மனிதராக அல்ல - சக மதத்தினராக பார்த்து கண்ணீர் விடவும், ஆவேசப்படவும் முடியும் இவர்களால், தங்கள் குடும்பத்தில், அருகில் உள்ளவர்களின் துயரை உணர முடியாதது விந்தைதான்.

என்ன மாதிரியான வக்கிர மனம் இவர்களது?

இது என்ன மாதிரியான கலாச்சாரம்?

இதை போதிக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும் ஒரு குமுகாயத்தின் செயல் என எடுத்துக்கொள்ள முடியுமா?

கலாச்சார பரிணாம வளர்ச்சி தடைபட்டு, பாதியில் நசிந்து போன ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடாகவே எனக்கு படுகிறது.

பழமையை, தான் புனிதமானதாக போற்றும் ஒன்றை, காலம் வென்று நிலைக்கச் செய்ய வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக எண்ணி, வெறி கொண்டு இவர்கள் நிகழ்த்துவதின் கொடூரத்தை புரிந்து கொள்வார்களா?

அப்படியான புரிதல் வருவதற்கு தடையாய் இருக்கும், அறிவை மழுக்கும், மனிதத்தை மறுக்கும், பழமையை மறு பரிசீலித்து, தவறென புரிவதை கைவிட இவர்கள் துணிவார்களா?

தங்களில் மனிதம் மறுபடி துளிர்க்க இடம் தருவார்களா?

தொலைந்த பதிவின் மறு பதிவேற்றம் இது:
முந்தய தலைப்பு:::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்து::தலாக்:: மன நிலையின் ஒற்றுமை

Get Nandalaalaa atom feed here!

Friday, May 13, 2005

மீண்டும் இந்திய அமைதிப்படை?

மக்கள் விடுதலை போர்ப்படை அமைப்பினர், காவல் நிலையம் ஒன்றின் மீதும், அருகிலிருந்த காவலர் குடியிருப்பின் மீதும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரியளவிலான பாதிப்போ, உயிர் சேதமோ எதுவும் இல்லை. இதில் கவணிக்க வேண்டியது, முதல் முறையாக இவர்கள் எறிகணை பயன்படுத்தியதையே.

இத்தாக்குதல், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், துர்கி காவல் நிலையம் மீது, வெறும் 200 மீட்டர் தொலைவிலிருந்து நடத்தப்பட்டது. 10ம் தேதி நல்லிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) [Communist Party of India (Maoist)] யின் மக்கள் விடுதலை போர்ப்படையால் [People's Liberation Guerrilla Army (PLGA)] மேற்கொள்ளப் பட்டது. 'விடுவிக்கப்பட்ட பள்ளநாடு' பகுதி கமான்டர் சுரேஷ் தலைமையில், இரண்டு லாரிகளில் வந்த 30 இளைஞர்களால் மட்டுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கையெறி குண்டுகளையும் பயண்படுத்தியுள்ளனர்.

அங்கிருந்த காவலர்கள், பதிலடியாக, இருதரப்பிலும் சம்பந்தப்படாத வாகன ஓட்டி ஒருவரை திருப்பி சுட்டுவிட்டு, கலைப்படைந்ததால், பின்னர் காவல் நிலையத்தின் உள்ளேயே ஓய்வெடுத்துக் கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் தாக்குதலை நீடித்து அப்பகுதியை போர்க்களம் போல் தோன்ற செய்த மக்கள் விடுதலை போர்ப்படையினர், பின்னர் சம்பவ இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள, அனுமான் ஆலயம் ஒன்றில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ஓங்கோல், ஐதராபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்த மக்கள் விடுதலை போர் படையினர், சாலையின் குறுக்கே அரசாங்க அட்டூழியங்களை கண்டிக்கும் பதாகைகளை கட்டியும், சிறு பாலங்களில் கண்ணிவெடிகளை புதைத்தும், டயர்களை கொளுத்தியும், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தாக்குதலில் பயன்பட்ட 500 மீட்டர் தூரம் வரை தாக்கக்கூடிய எறிகணை மக்கள் விடுதலை போர்ப்படையின் சொந்த தொழில்நுட்ப தயாரிப்பு எனவும், துர்கி காவல் நிலையம் மீது நடத்தப்பட்டது எறிகணைக்கு ஒரு "சோதனை தாக்குதல்" என்றும் கமான்டர் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

இந்த எறிகணை, மது என்ற கமான்டரால் வடிவமைக்கப்படது என்றும், தற்போது நெல்லூர் காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவரை விடுவிக்கவே இந்த தாக்குதல் என்றும், அவரை விடுவிக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தடை காரணமாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான மக்கள் முதல் முறையாக, மக்கள் போர்ப்படையினரை வெகு அருகில் கண்ணுற்றதுடன், அவர்கள் வெடிகளை புதைப்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சுமார் 3.30 மணி நேரத்திற்கு பிறகே இவர்கள் அங்கிருந்து விலகி, தங்கள் மறைவிடத்திற்கு சென்றுள்ளனர். அதுவரை அவர்களுக்கு எவ்வித எதிர்ப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை.




ஆந்திராவில், நிலமற்ற ஏழை விவசாய கூலிகளின், உழைப்பை சுரண்டும் நில உடமையாளர்கள் மற்றும் கடன் கொடுத்து அநியாய வட்டிக்கு வாழ்க்கையை சீரழிக்கும் பண முதலைகளுக்கு எதிரான சிறு சிறு போராட்டங்கள் 1970களின் மத்தியில் துவங்கின.

இவற்றை மேற்கொண்ட, கிராம அளவில் இயங்கிய சிறு குழுக்களை ஒருங்கிணைத்து, 1980ல் மக்கள் போர்ப்படை என்ற அமைப்பு, கொண்டபள்ளி சீதராமய்யா என்பவர் உருவாக்கினார். நக்சல்பாரி இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் ஒரு பள்ளி ஆசிரியராவார்.

பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான இவ்வமைப்பு, ஆந்திர மாநிலத்துக்கு வெளியே வர்க்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, பல்வேறு இடது சாரி சிந்தனையுடைய அமைப்புக்களுடன் கை கோர்த்தது. இன்று, இவ்வமைப்பு ஆந்திர மாநிலம் தவிர, ஒரிஸா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களில் வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளதுடன் கர்நாடகம், ஆந்திர மாநில எல்லையோர தமிழ்நாட்டு மாவட்டங்களிலும் இவர்களின் தொடர்பு பரவியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

நேபாளத்திலுள்ள மாவோயிய ஆயுத போராட்டக் குழுவுடனும், வடகிழக்கில் இயங்கி வரும் ஆயுத குழுக்களுடனும், மற்ற மாநிலங்களில் உள்ள ஆயுதமேந்திய இடது சாரி இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. வடக்கே நேபாளத்திலிருந்து தெற்கே ஆந்திரா வரையிலும், மேற்கே மஹாராஷ்டிராவிலிருந்து, கிழக்கே வட கிழக்கு மாநிலங்கள் வரையிலும் தங்கள் போராட்ட களமாக, வலுப்பெற செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003, அக்டோபர் 1ம் தேதியன்று திருப்பதியில், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை தாக்கிய போது, இவர்களின் செயல்பாடு நாடளவிலான கவனத்தை பெற்றது. இந்த தாக்குதலை முன்வைத்து மக்களின் அனுதாபத்தை பெற்றுவிட நினைத்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில தேர்தலையும் நடத்தினார். ஆனால் அந்த தேர்தலில், தெலுகு தேசம் படுதோல்வியடைந்தன் மூலம் பெருவாரி ஆந்திர மக்கள், இவ்வியக்கத்திற்கு எதிராக இல்லை என்பதை வெளிப்படுத்தியதாக, பெரும்பாலோர் கருதுகின்றனர்.

கடந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் ராஜசேகர ரெட்டி, மக்கள் விடுதலை போர்ப்படையினருடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டார்.

அதுவரை தலை மறைவு வாழ்கை மெற்கொண்டிருந்த இவ்வமைப்பின் தலைவர்கள், பேச்சு வார்த்தைக்காக காட்டை விட்டு வெளியே வந்தனர். அச்சமயத்தில் அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு திரண்ட மக்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அதுவரையில் ஆந்திராவின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், தலைவருக்கும் கூடியிராதபடி, மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர். மக்களிடையேயான அவர்களின் செல்வாக்கு, மத்திய, மாநில அரசுகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரை கவலை கொள்ள செய்தது.

இத்தகைய மக்களாதரவு என்பது மிகச்சாதாரணமாக கிட்டக்கூடிய ஒன்றல்ல. இவர்களின் வளர்ச்சியும், இவர்களுக்கான மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்க காரணம் என்ன என்பதை அறிய முற்படுமுன் ஆந்திர மாநிலத்தின் குமுக பொருளாதார நிலையை புரிந்து கொள்வது முக்கியம்.

அந்திராவில், நிலவுடமை என்பது மேல் சாதிகளுக்கும், கீழ் நிலை சாதிகள் நிலமற்ற ஏழைகள் என்பதும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது போல்தான் என தோன்றினாலும், இன்னும் ஆழமானது. தமிழகத்தை போலல்லாது ஆந்திராவில், உச்சசாதியினரும், அவர்களுக்கு அடுத்த நிலை சாதியினரும், படி நிலைக்கொப்பிய அளவில் நிலவுடமையாளர்களாக உள்ளனர். கீழ்சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் எக்காரணம் கொண்டும் - சில மாவட்டங்களில் - விளை நிலங்களை விலைக்கு கூட வாங்க முடியாது என்பது அங்கே எழுதப்படாத நடைமுறை வழக்கம். மீறும் தாழ்த்தப்பட்ட, கீழ்நிலை சாதியினரின் நிலங்களை பறித்துக்கொள்ளும் அல்லது அவர்களை எரித்துக்கொல்லும் உரிமையும், கடமையும் அப்பகுதி நில உடமையாளருக்கு (மேல் சாதியினருக்கு) உரியது.

தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளவர்கள் மிராசுதார்கள் என்று அறியப்படுவார்கள். இவர்களை ஆந்திர மாநில மிராசுகளுடன் ஒப்பிட்டால், மலைக்கு முன் தஞ்சாவூர் மிராசு சிறு மடு கூட அல்ல. ஆந்திராவின் ஒரு சில மாவட்டங்களில் ஒரு தாலுகாவின் மொத்த விளை நிலங்களும் நான்கு ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். அக்குடும்பங்களை தவிர ஏனையோர் அவர்களை அண்டி பிழைப்பவர்களே. இந்நிலையில், சாதிய அடிப்படையிலும் தலைமுறை தலைமுறையாக சுரண்டப்பட்ட மக்கள் தங்களுக்காக குரல் கொடுப்பவர்களாக, தங்கள் நலனை முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கமாக மக்கள் விடுதலை போர்ப்படையினரை காண்கின்றனர்.

இவ்வமைப்பினர், காவல் நிலயங்கள், காவலர்கள், காவல்துறை உளவாளிகள் ஆகியோர்களை தாக்குவது, என தங்களின் சுய இருப்பின் பாதுகாப்புக்கான செயல்பாட்டுடன் மட்டும் நிற்பதில்லை. மக்களின் வருத்தும் அநியாய வட்டி கடன், நிலமின்மை ஆகிய பிரச்சினைகளுக்கும் அதிரடி தீர்வு காண்கின்றனர்.

முன்னறிவிப்பின்றி ஏதேனும் ஒரு கிராமத்தினுள் புகுந்து, அங்கிருக்கும் விளை நிலங்களை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தல், அவர்களின் கடன்களை செல்லாது என அறிவித்தல் என இவர்கள் நடத்தும் அதிரடிகள் அப்பகுதி மக்களிடம் இவர்களுக்கான ஆதாரவை பெருக்கியுள்ளது.

இவர்களால் பாதுகாக்கப்படுவதும், பலன் பெருவதும் அடிநிலை மற்றும் கீழ் நிலை சாதி, நிலமற்ற ஏழை மக்கள் என்பதால், அவர்களின் மத்தியிலேயே இவர்களின் ஆதரவும் உள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே இவ்வியக்கங்களில் இணைகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்படும், மேல்சாதி நிலவுடமையாளர்கள் இவ்வமைப்பினரை அழித்தொழிக்க அரசாங்கம், காவல் துறையினர் மூலம் மெற்கொள்ளும் முயற்சிகள் எவ்வித பலனையும் இதுவரை அளிக்கவில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படையின் எண்ணிக்கை 600லிருந்து, 1000க்குள்ளாக மட்டுமே இருக்கலாம். இவர்கள் சிறு எண்ணிக்கையிலேயே ஆயுதமேந்தி, காடுகளில் பதுங்கி யிருந்தாலும், நாட்டினுள் இவர்களுக்கு பெருத்த செல்வாக்கு உள்ளது.

இன்றைக்கு அதிகளவில், மாணவர்கள் இவ்வமைப்புகளில் இணைகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் காட்டுக்குள் சென்று தலை மறைவு வாழ்கை வாழ்வதில்லை. மாறாக, ஊர்ப்பகுதியிலேயே மக்களுடனிருந்து, அவர்களின் விழிப்புணர்ச்சிக்கு உழைக்கின்றனர். எனவே, இவர்களுடன் இணைவதை, பெற்றோர்களும் தடுப்பதில்லை.

சென்ற ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முக்கிய காரணம், ஆந்திர அரசால், மக்கள் விடுதலை போர்ப்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது தான்.

மக்கள் விடுதலை போர்ப்படையினரின் முக்கிய கோரிக்கைகள்:


  • நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, விளை நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தல்.


  • நில உடமை சீர்திருத்தங்களை முன்னிருத்தி மக்களை திரட்டி போராடுவதற்கு அனுமதி. (ஆந்திர அராசாங்கம், இவ்வகை போராட்டங்களை / ஆர்ப்பாட்டங்களை நடத்த எந்த ஒரு மைப்பையும் இலகுவில் அனுமதிக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.)


  • மாநில திட்டங்களுக்கு உலக வங்கியின் கட்டுப்பாடுகளை நீக்குவது.


  • ஆந்திராவின் ஒரு பகுதியினை தெலுங்கானா மாநிலமாக பிரிப்பது.


  • நக்சலைட் வேட்டை என்ற பெயரில் காவல் துறையால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நீதி விசாரணை.


இவற்றில் நில சீர்திருத்தம் தொடர்பிலானதை தொடுவதற்கு ஆந்திராவின் எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இருக்காது, வராது என்பதே நடைமுறை உண்மை. நிலவுடமை மேல்சாதியினரை பகைத்துக்கொண்டு அரசியலில் நிலைப்பது மட்டுமல்ல, ஆந்திராவில் வாழ்வதே சாத்தியமில்லை.

உலக வங்கியை எதிர்ப்பது என்பதும், பிரதமர் மன்மோகன், அவரின் சீடரும் உலக வங்கியின் இந்திய இதயமும் ஆன சிதம்பரம், ஆகியோரை எதிர்ப்பதும் ஒன்றாகும். இதுவும் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு முடியாமல் போய்விட்டதில் வியப்பில்லை.

தெலுங்கானா பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன வென்பது அக்கட்சியின் தலைமைக்கே புரியாத புதிர். எனவே தற்போதைக்கு அதிலும் மவுனம்.

நீதி நிலை நாட்டப்படுவதில் ஆளும் வர்க்க ஆர்வம் பாரறிந்த ஒன்று. ஆந்திர அரசால் இதுவும் இயலாமல் போனது.

இறுதியாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் காட்டிலிருந்தவர்களை, நாட்டுக்குள் வரவழைத்து, மிகப்பெரிய ஊடக கவனிப்பை இலவசமாக பெற்றுத் தந்தது தவிர வேறு எவ்வித ஆதாயத்தையும் ஆந்திர அரசால் பெற முடியவில்லை.

சமாதான முயற்சியின் தோல்விக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. நக்சலைட் வேட்டை என்ற பெயரில் நடக்கும், ஆளும் அரசியல் / அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை, இவற்றின் கூட்டுக்கொள்ளை. ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேச பாதுகாப்பு என்ற பெயரில், தணிக்கைக்கு உள்ளாகாமல் செலவு செய்யும் வாய்ப்பை அவர்கள் இழக்க தயாரில்லை. செலவிடும் பணத்திற்கு அவ்வப்போது, நிலவுடமை மேல்சாதியினரை எதிர்க்கும் அப்பாவி ஏழைகளை கொண்று, ஊடகங்களுக்கும், மத்திய அரசுக்கும் கணக்கு காட்டி வருகிறது ஆந்திர ஆளும் வர்க்கம். சமாதானம் ஏற்படின் இவ்வாய்ப்பு போய்விடும். பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க இவர்களுக்கு மனமில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படை என்பது ஆயுதம் தாங்கிய, தேச பிரிவினை தீவிரவாதிகள் என்று நினைத்தால், அந்நினைப்புடனே, அவர்களை பலப்பிரயோகத்தினால் அழித்துவிட முனைந்தால், மாநில அரசுக்கு எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை.

நிலமை மோசமடைந்தால், இந்திய இராணுவத்தை, அமைதிப்படை என்ற நாமகரணமிட்டு ஆந்திராவினுள்ளும் கட்டவிழ்த்துவிட மத்திய அரசும் தயாராய் இருக்கலாம்.

ஆனால் இவ்வமைப்பினரை, ஒரு சில நூறு உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பை ஒழிப்பதன் மூலம் ஏதேனும் நிரந்தர தீர்வு எட்டப்படுமா? என்றால் முடியாது என்றே தோன்றுகிறது.

இவர்களின் போராட்டத்திற்கான வேர் என்னவோ அது களையப்பட வேண்டும்.

நிலமற்ற ஏழை விவசாய கூலிகள், கீழ்சாதியில் பிறந்த ஒரே காரணத்தால், நிலமற்றவனாகவும், சொற்பக்காசை கடனாக பெற்று, தன் வாழ்நாள் உழைப்பை பறிகொடுப்பவனாகவும் வைத்திருக்கும் குமுகாய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

இல்லாவிடில், இத்தகைய ஆயுத போராடக்குழுக்கள் மேலும் மேலும் வலுப்பெறுவதை தடுக்க முடியாது.

தலைமுறைகளை ஏழைகளாக வைத்திருக்கும் சதி எப்போதும் வென்றிருக்கலாம், இதுவரை.

ஒரு தலை முறையாவது, கோழையாயில்லாமல், நிமிர்ந்து நின்று போராடுவதும் விதியாகும்.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 10, 2005

தலாக்…தலாக்…தலாக்!

இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண வரைவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, வரவேற்றும், ஏமாற்றம் தெரிவித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, குமுக சிந்தனையுடைய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அமைப்புகள் ஏமாற்றக்குரலையே எதிரொலிக்கின்றன.

இந்த வாரியத்துக்கு எவ்விதமான, சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லையென்பதையும், இஸ்லாமிய சட்ட முறைக்கு விளக்கம் கூறும் ஒரு (பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு) அமைப்பாக மட்டுமே செயல் பட்டு வருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

போபாலில் கூடிய, முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் 18வது கூட்டம், சில சிறப்புகளை கொண்டிருந்தது.

1. இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லீம்கள், தங்களுக்கென தனியான ஒரு சட்ட வாரியம் அமைப்பது குறித்து பேசி வரும் வேளையில், இக்கூட்டத்தில் பங்கேற்க ஷியா முஸ்லீம் தலைவர்களையும் அழைத்திருந்தது;

2. மாதிரி நிக்காநாமா வடிவைக்கப்படும் என்ற அறிவிப்பு, இஸ்லாமிய திருமண நடைமுறையில் உள்ள குறைகளை களையக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு;

3. மேலும், இஸ்லாமிய குமுகத்தினரிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் பல பிற்போக்கு வழக்கங்கள் கண்டிக்கப்படும், அவற்றுக்கு ஒரு மாற்று முன் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு;

இத்தகைய எதிர்பார்ர்ப்புகளுக்கு, இக்கூட்டத்தின் தொடக்க நாள் நிகழ்ச்சியிலேயே, பலத்த அடி கிடைத்தது.

இந்த அமைப்பின் தலைவர், மௌலானா ராபெ ஹஸ்னி நடாவி, தனது துவக்க உறையில், குடும்ப கட்டுப்பாடு என்பது, இஸ்லாத்தின் பார்வையில் தவறு என அறிவித்தார்.

::உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களை பற்றி கவலை கொள்ள நானிருக்கிறேன்:: என்ற அல்லாவின் வசனத்தை கூறி, இந்திய இஸ்லாமியர்களின் வறுமைக்கு, அதிக குழந்தைகளை கொண்ட இஸ்லாமிய குடும்பம் காரணம் என்ற கருத்தை மறுத்தார்.

வறுமையால், தகுந்த மருத்துவ சிகிச்சையின்றியும், பசியாலும் வாடி இஸ்லாமிய குழந்தைகள் மரணமடைவதை, நியாயப்படுத்தவும் அல்லாவின் வேறொரு வசனம் நடாவிக்கு தெரிந்திருக்க கூடும்.

[இவ்வமைப்பின் துணைத்தலைவர், மௌலானா சையத் கால்பே சாதிக் சென்ற ஆண்டு, குடும்ப கட்டுப்பாடுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து, இஸ்லாமிய தலைவர்களின் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது]

இஸ்லாமிய சட்டங்கள், கருத்தரிப்பை தவிர்க்கும் தற்காலிக முறைகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆணுறை, கருத்தடை மருந்து உட்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும். ஆனால், கருக்கலைப்பு, மலடாக்கும் அறுவை சிகிச்சை ஆகியன இஸ்லாத்துக்கு எதிரானதாக நோக்கப்படுகிறது.

இஸ்லாமிய திருமண நடைமுறையில், வரதட்சனைக்கு இடமில்லை. மாறாக ஆண் தான் மணம் செய்யும் பெண்ணுக்கு மெஹர் என்ற மணத்தொகை அளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்திய முஸ்லீம்கள் மத்தியிலும் வரதட்சிணை முறை புரையோடியுள்ளது என்பதே உண்மை. வரதட்சணை கொடுமை இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை என்பது உண்மைக்கு மாறான தகவல் மட்டுமே. மற்ற எல்லா சமூகங்களைப் போலவும் இஸ்லாமியரிடையேயும் இப்பழக்கம் உள்ளது. இதையொட்டி, வரதட்சனையை கண்டித்துள்ளதுடன், மெஹர் தொகை வழங்குவதற்கு கால அளவையும் நிர்னயம் செய்துள்ளது.

போபால் கூட்டத்தின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்ட மாதிரி நிக்காநாமா எனும், இஸ்லாமிய திருமண வரைவு இவற்றை கொண்டிருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

அதில்,
பல தார மணத்திற்கு கன்டனமோ தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, தன்னை மணமுடித்தபின், தன் கணவன் மற்றொரு மணம் புரிவதை தடுக்க, ஒரு ஒப்பந்தந்தை நிக்காநாமாவில் அப்பெண் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது எந்தளவு கடைபிடிக்கப்படும் என்பதும், பலனளிக்கும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய ஒரு ஒப்பந்தம் மீறப்பட்டால், ஆணுக்கு என்ன தண்டனை என்பதோ, பெண்ணுக்கான பதுகாப்பு குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்த ஒப்பந்தம், பேணப்படுவதையும், மீறப்படுவதையும் கண்கானிக்கப்போவது, அவர்கள் வாழும் பகுதியிலுள்ள ஜமாத் எனும் அமைப்பு. அது முழுக்க முழுக்க ஆண்களை மாத்திரமே கொண்ட ஒரு அமைப்பாகும். இதனிடமிருந்து பெண்களின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான தீர்வு கிடைக்குமா என தெரியவில்லை. இந்த ஜமாத்துகளின் ஆணாதிக்க, பெண்கள் விரோத போக்கு குறித்து, புதுக்கோட்டை STPES அமைப்பின் நிறுவனர் தாவுத் செரிபா கனம் என்ற முஸ்லீம் பெண் ஆர்வளர் சமீபத்தில் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குழந்தைகள் மணம், அதாவது ஆறு, ஏழு வயது பெண்களை மணம் முடிக்கும் வழக்கம் இக்குமுகத்தில் இல்லாவிட்டாலும், பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட பெண்களை (பருவமடைந்த) மணம் முடிக்கும் வழக்கம் இந்திய இஸ்லாமியரிடையே பரவலாயிருக்கிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படாதது வருத்தத்திற்குறியதே.

இறுதியாக, இஸ்லாமிய மண முறிவு முறை பற்றியது.

இஸ்லாத்தில், மணமுறிவு வழங்கும் அதிகாரம், ஆணுக்கு மட்டுமே உள்ளது. பெண்ணுக்கு ஆணைப்போல அதிகாரமல்ல, அடிப்படை உரிமைக்கூட மறுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கணவனிடமிருந்து, மணமுறிவை யாசித்து பெறும் நிலையே இஸ்லாமிய பெண்களுக்கு உள்ளது.

நடாவி இதை நியாயப்படுத்தி, ஆண், பெண் இருவருக்கான உரிமைகளை அல்லாவே வரையறுத்துள்ளதாக கூறுகிறார். மேலும், ஆண்களுக்கு அல்லாவால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் உரிமையானது, அவர்களின் அதிகப்படியான பொறுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

ஒரு கணவன் தன் மனைவியை விலக்க தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும் என்பது இனியும் நீடிக்கும். ஆனால், மூன்றையும் ஒரே நேரத்தில் சொல்வது மட்டுமே இப்போது கண்டிக்கப் பட்டுள்ளது.

மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு, கணவனிடமிருந்து உதவி பெறுவதற்கு(ஜீவனாம்சம்) இஸ்லாத்தில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு காரணமாக, திருமணத்தின் போது மணமகனால், மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் மெஹர் என்ற தொகை ஈடாக சொல்லப்படுகிறது.

ஆனால்,மஹர் என்பது, நடைமுறையில் வழங்கப்படும் தொகை மிக குறைவானது, அல்லது அப்படி ஒரு தொகையை திருமண ஒப்பந்தத்தில் எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டு பின் வழங்கப் படுவதில்லை, அல்லது வழங்கப்பட்டும், கணவனால் பிற்காலத்தில் அத்தொகை கைக்கொள்ளப் படுகிறது. இதற்கு மாறாக சொற்ப எண்ணிக்கையில் சிலர் இருக்கலாம்.

இந்நிலையில் தலாக் என மூன்று முறை கூறி ஒரு பெண்ணை நிர்கதியாக்கும் கணவனுக்கு உள்ள வசதி, பெரும்பாலும், தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தலாக் முறை, முஸ்லீம்களால் பின்பற்றப்படும் வேதநூலான குரானில் சொல்லப்பட்ட முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனாலேயே பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளால் இந்த முறையை தடை செய்ய முடிந்துள்ளது. இந்திய இஸ்லாமியர்களிடையே இன்னும் அந்த துணிவு வராமையும், பழமை நோக்கும், பெண்ணியம் குறித்து பிற்போக்கு நிலையே நீடித்து வருவது வருந்தத்தக்கது.

வறுமையும், குறைவான கல்வி அறிவையும் கொண்ட பிற்பட்ட நிலையிலுள்ள இந்திய இஸ்லாமிய குமுகாயமானது, பெண்ணுரிமையை மறுப்பதன் மூலம், மேலும் தன்னை பின் தள்ளிக்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும்.

மதங்கள் பெயர்களாலும், சடங்குகளாலும் மாறுபட்டுள்ளதே தவிர, பிற்போக்குத்தனங்களை தாங்கி பிடிப்பதில் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவே உள்ளன.

வெகு விரைவில் இந்திய இஸ்லாமிய குமுகாயம், பலதார மணத்திற்கும், தலாக் மூலம், ஒரு தலை பட்சமாக பெண்களை மணவிலக்கி நிர்கதியாகுவதற்கும், இறுதியாக ஒரு முறை 'தாலாக் தலாக் தலாக்' சொல்ல வேண்டும். இதன் மூலமே தன்னை சார்ந்த பெண்களுக்கும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதாக இருக்க முடியும்.

Get Nandalaalaa atom feed here!

Sunday, May 08, 2005

மெய்யாலுந்தா....







என்னத்த சொல்ல போ.

Get Nandalaalaa atom feed here!

Saturday, May 07, 2005

கற்பழித்தால் கல்யாணம்

காதலிக்க மறுத்த பெண்ணை தூக்கிச்சென்று கற்பழித்தவருக்கு, நீதிமன்றத்தில் திருமணம் செய்விக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட்டது. கற்பழித்து மணந்தும் கொண்டவரை பாராட்டி 'வீர்புணர்ஸ்காரா' விருதுக்கு சிபாரிசு - நன்றி 'தினமலம்'

'வேதகால நீதிபதி' பதிவில் வன்புணர்ச்சி குற்றஞ்சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வதாக குற்றவாளி கூற, அதை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து அப்பெண்ணின் கருத்தை கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது குறித்து என் சந்தேகங்களை எழுப்பியிருந்தேன்.

நீதிபதியின் இச்செயலை ஏற்புடன் சிலவும், கண்டித்து சிலவுமாக நண்பர்களின் பின்னூட்டங்கள் இருந்தது.

பத்ரி இதனிடையே, மும்பையில் நடந்த, இதே வகையிலான வேறு வழக்கை குறிப்பிட்டு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.

அந்த மும்பை வழக்கில் குற்றம் சாட்டியப்பெண் (இது இவருக்கு நேர்ந்த இரண்டாவது வன்புணர்ச்சி என இந்து செய்தி சொல்கிறது), குற்றம் சாட்டப்பட்ட ஆண் மணம் செய்துகொள்ள முன்வந்ததை ஏற்றுக்கொண்டதால், (குற்றம் நிரூபிக்கபடாத நிலையில்?) வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் அந்த ஆண்.

முந்தய டெல்லி வழக்கின் நீதிபதி, தண்டனையிலிருந்து தப்பிக்கவே, குற்றவாளி மணம் செய்துகொள்ள முன்வந்தார் என தீர்ப்பில் குறிப்பிட்டு, ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

குற்றவாளி தப்பிக்க முயல்வதை புரிந்துகொண்ட நீதிபதி, அப்பெண்ணின் கருத்தை அறிய வேண்டி வழக்கை ஒத்தி வைத்ததன் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? மேலும், இந்த இரு வழக்குகளின் மூலம், இந்திய குற்றவியல் சட்டம் குறித்து நான் புரிந்து கொண்டது:

வன்புணர்ச்சி என்பது இரு நபர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விதயம்/குற்றம்.

பாதிக்கப்பட்டவர்/அவர் சார்பாக மற்றவர், அவர்களாக குற்றஞ்சாட்டினால் மட்டுமே வழக்கு பதியப்படும்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வரும் என்பதால், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது/அவருக்கு எதிராக, அரசு வழக்கறிஞர் வாதிடுவார். ஆக இங்கே அரசு தரப்பு வழக்கை நடத்துகின்றது.

வழக்கு நடக்கும் போது, வன்புணர்ந்தவர், பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்தால், அதை அப்பெண்ணும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதை நீதிமன்றம் அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து விடும்.

கோரிக்கை குறித்து, பாதிக்கப்பட்டவரின் கருத்தை கேட்பது, குற்றம் சுமத்தப்பட்டவரின் உரிமையாகும் - குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் கூட.

இவ்வாறான கோரிக்கையை நிராகரிக்க நீதிபதிக்கு அதிகாரமில்லை. (அவ்வதிகாரம் இருந்திருப்பின், டெல்லி நீதிபதி அனுமதித்திருக்க மாட்டார் என்ற புரிதலுடன்)

மணந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட பெண் சம்மதித்து விட்டால், குற்றஞ்சுமத்தப்பட்ட/நிரூபிக்கப்பட்டவருக்கு தண்டனை தர சட்டத்தில் இடமில்லை.

இந்நிலையில் நீதிமன்ற நேரத்தை வீணடித்தார் என்பதற்காக குற்றம் சாட்டியவருக்கே (பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு), அபராதம் அல்லது குறுகிய கால சிறை போன்ற சிறு தண்டனை ஏதேனும் வழங்கப்படலாம்.

இதன் அடிப்படை, இது இரண்டு தனி நபர் பிரச்சனை, அவர்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்ட பின் அங்கே நீதிமன்றத்துக்கு, நீதியை நிலைநாட்டும் வேலையில்லை.

இதையே, //ஆனால் தனியார் கொண்டுவரும் வழக்கை எந்நேரத்திலும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும்!// என சட்ட முறையை விளக்கி, பத்ரி அவரின் பின்னூட்டத்திலும் எழுதியிருந்தார்.

இந்திய குற்றவியல் சட்டப்படி இந்த நீதிபதிகள் செய்தது சரியே என்பது *இப்போது* புரிகிறது.

சென்ற பதிவு பற்றி:

டெல்லி வழக்கின் நீதிபதியின் மேல் நான் சந்தேகப்பட்டது தவறு. மற்ற பலவற்றை போலவே, எனது சட்ட அறிவிலும் உள்ள குறைபாட்டினால் - தவறாக எழுதியதற்காக, எனது எந்த பதிவையும் படிக்கும் வாய்ப்பே இல்லாத அந்த டெல்லி நீதிபதி ஜே.எம்.மலிக் -கிடம் இப்பதிவில் நான் மன்னிப்பு கோருகிறேன்.

இதை வாசிக்கும் ஆன்றோர், சான்றோர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். அவர்களிடமே இதை ஏற்றுக்கொள்ள வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த பதிவிற்கான தலைப்பு 'வேதகால சட்டம்' அல்லது 'காட்டுமிராண்டிகளின் குற்றவியல் சட்டம்' என்பதாக இருந்திருக்க வேண்டும். (பின்னொரு நேரத்தில் இந்த தலைப்புகளை நானே பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதால் இப்போதே அவற்றுக்கான காப்புரிமையை கோரிவிடுகிறேன்.;-)

பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து:

இதில் இரண்டு பெண்கள் செய்ததில் எது சரி, எது தவறு என அலசுவது சரியல்ல.

டெல்லி பெண் செய்ததை சரியானதாக காணும் எனக்கு, மும்பை பெண்ணுக்கு உள்ள [சமூக / குடும்ப / பொருளாதார இவற்றில் ஏதோ ஒன்று / சில / எல்லாம்] நிர்ப்பந்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது.

மும்பை பெண்ணை காதலிப்பதாக கூறி, மணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் மணக்க மறுத்தவர், வழக்கு என வந்த பின், தண்டனைக்கு பயந்து மணந்து கொள்ள சம்மதிக்க, இவர்களின் மண வாழ்க்கை என்ன மாதிரி இருக்கும் என்பதை, என்னால் ஓரளவு யூகிக்க முடிகிறது. அப்பெண்ணை நினைத்து அனுதாபப்படுவதே என்னால் செய்ய முடிவது.

சட்டத்தின் நிலை குறித்த எனது நிலை:

வன்புணர்ச்சி என்பது சமூகம் சார்ந்ததல்ல, தனிநபர்களின் பிரச்சனை என்பதாக என்னால் பார்க்க முடியவில்லை. அதன் காரணமாகவே எனது முந்தய பதிவு. இப்படி ஒரு கருத்தையே விசிதாவும் தனது பின்னுட்டத்தில் எழுதியிருந்தார்.

எப்படி கொலை குற்றம், நிறுபிக்க பட்டால், கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாகிறதோ அது போல வன்புணர்ச்சி குற்றமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திருட்டு, ஏமாற்று போல், தனிநபர் குற்றச்சாட்டை திரும்ப பெற அனுமதிப்பதை, வன்புணர்ச்சி குற்றத்திலும் கையாள்வது சரியாக படவில்லை.

இத்தகைய சட்டமுறை எம்மாதிரியான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது குறித்த எனது ஐயப்பாடு:

ஆசை கொண்ட பெண் காதலிக்க/இணங்க மறுத்தால், அவரை கடத்திச்சென்று வன்புணர்ந்து, பின்னர் திருமணம் செய்து கொள்வது (இப்படி ஒரு பழைய படம் பார்த்த ஞாபகம் பிரபு-ராதா?) நடக்கும் அபாயம் உள்ளது. அந்த ஆணின் (மணம் செய்யும்) செயல், மனிதாபிமானம் கொண்ட ஒன்றாகக்கூட, சமூகத்தில் பார்க்கப்படும் அபாயமும் உள்ளது.

காதலை/ஆசையை தெரிவிப்பதற்கும், ஈவ் டீஸிங்கிற்கும் வித்தியாசம் தெரியாமல், சினிமாவால் ஆக்கப்பட்ட சமுதாயத்தில், அல்லது சமூகத்தால் அப்படி ஆக்கப்பட்ட சினிமாவை கொண்ட ஒரு சமூகத்தில், இது நடக்காது என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் என்பது போன்ற செய்திகளோடு, இனி நீதிமன்றத்தில் கற்பழிப்பு ஜோடி திருமணம் என்ற செய்திகள் தாங்கியும் பத்திரிக்கைகள் வரலாம். அப்படி ஒரு கற்பனை பயங்கரமே இப்பதிவின் முதல் பத்தி.

Get Nandalaalaa atom feed here!

Friday, May 06, 2005

குருமூர்த்தியின் மதச்சார்பின்மை!

இந்துத்துவ குரலையே இதுவரை ஓங்கி ஒலித்து வந்த குருமூர்த்திக்கு, திடீரென, இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து பிறழ்வது குறித்த கவலை, பிளந்த தூணின் நரசிங்கமாய் அவதரித்துள்ளது.

குருமூர்த்தியின் இந்த மாற்றத்திற்கு காரணமான, இந்திய அ(றிவிலி)திகார மையத்துக்கும், மரணமடைந்த பாப்பரசர் ஜான்பால் II க்கும் நன்றி தெரிவித்து விட்டு மேலே படியுங்கள்.

'லப்-டப் லப்-டப்' என துடிக்கும் 110 கோடி இதயங்களில், ஒரே ஒருவரின் இதயம் மட்டும் 'சுதேசி சுதேசி' என விம்மி வெடிக்கும்.

காலை கடனை, அது வாழை இலையோ, வெறும் மண் தரையோ, அதில் விதேசி என எழுதிவிட்டு, அதன் மேல தான் கழிப்பார் ஒருவர்.

அந்த ஒருவர் தான் 'சுதேசி ஜார்கன் மன்ச்'ஐ நிறுவிய, கலப்படமற்ற, சுத்த 'ஹி'ந்தியன் குருமூர்த்தி.

சரி இனி நடந்ததை பார்ப்போம்.

சுத்த சுதேசியான குருமூர்த்தி, ஒரு நாள் விதேசி இணைய தளமொன்றில் தவறி விழுந்திருக்கின்றார். அது அயர்லாந்து நாட்டினர் கூடும் தளம். அங்கே, அவர்கள் பாப்பரசர் மறைவுக்கு, அயர்லாந்து அரசாங்கம் அரசு முறை துக்கம் கடைபிடிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.

அரசு முறை துக்கம் கடைபிடிப்பதை அயர்லாந்து மக்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் விவாதத்திலிருந்து தெரிந்து கொண்டுள்ளார் மேற்படியார். 92% கத்தோலிக்கர்கள் வாழும் அயர்லாந்து நாட்டிலேயே இப்படியாவென அயர்ந்துபோன அவருக்கு உடலெல்லாம் புல்லரித்துள்ளது.

கூடுதலாக, பிரான்ஸ் அரசின் அரசு முறை துக்க அறிவிப்பை வெளியிடுவதற்கும், அந்நாட்டின் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையும், பாப்பரசரை தொடர்ந்து, தலாய் லாமா, (மறைந்த?) கோமேனி ஆகியோருக்கும் இதே மரியாதை வழங்கப்படுமாவென கேள்வியெழுப்பியதும், அவரது மண்டையில் மணி அடித்திருக்கிறது.

அமெரிக்கா முதலான கிருத்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் அனுதாப அறிவிப்புடன் நின்றுவிட்டதும் அன்னாரது நினைவை குடைந்துள்ளது.

சீன அரசோ பாப்பரசரை தலைவராக பின்பற்றவே அந்நாட்டு கிருத்துவர்களுக்கு தடை விதித்திருந்தது வேறு அவரின் மூலையை பிசைந்துள்ளது.

இவற்றோடு, 98% கத்தோலிக்கர்கள் அல்லாத மக்களை (இதுக்கு மட்டும் 'முகமதியர்'ஐ ஆட்டக்கி சேத்துக்கிட்டாரு) கொண்ட இந்திய அரசு மூன்று நாள் அரசு முறை துக்கம் கடைபிடிப்பது, புனித தேசியக்கொடி அரைகம்பத்தில் பறப்பது எல்லாம், அவரின் நெஞ்சை பாற்கடலாய், கடையோ கடையென கடைந்திருக்கிறது.

புராண கடைசலில் ஆலகால விஷம் திரண்டது போல்,
இணைய கடைசல் குருமூர்த்தியினுள் மதச்சார்பின்மை கொள்கை மேலான பாசமாக திரண்டிருக்கிறது.

அன்று திரண்ட பாய்ஸன் ஆலகாலத்தை உட்கொண்டான் அந்த நீலகண்டன்.

இன்று திரண்ட பாசத்தை, இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை மேல் காறி துப்பியிருக்கிறார் இந்த குருமூர்த்தி.

இந்த துப்பலில், சாரமில்லை ஈரமில்லை என ஒதுக்கிவிட முடியாது.

மதத்தலைவர் மறைவுக்கு மூன்று நாள் துக்கமென்றால், இலட்சக்கணக்கில் மதத்தலைவர்களை கொண்ட ஞான பூமியாம் இந்தியாவில், வருடத்தில் மூன்று நாளாவது துக்கமின்றி கழியுமா?

'நல்லரசு' ஆவது அப்புறம் இருக்கட்டும், முதலில் 'வல்லரசு' ஆகும் என பார்த்தால், முடிவில் 'துக்கரசு' ஆகி, தினம் மூக்கை சிந்தி சிந்தி, மூக்கற்ற 'மூலியரசு' ஆகும் அபாயத்துக்கு இந்தியா ஆளாவதை யாரால் தான் தாங்க முடியும்?

இந்நிலையில், கத்தோலிக்க மத தலைவருக்கு இந்திய அரசின் துக்க அறிவிப்பா என கேள்வி எழுந்த பின் தான் தடுக்கி விழுந்த சொரணையே வந்து, அவசர அவசரமாய், 'பாப்பரசர் வாடிகனின் தலைவர் என்ற முறையிலேயே இந்த துக்கம்' என சோகம் வடிய மேலே ஒட்டியிருந்த தூசியை துடைத்துக்கொண்டது இந்திய நடுவனரசு.

பின்னர் தான் நாசியை அடைத்தது, தூசியை துடைத்த 'கை'யிலிருந்த அசிங்கம் - இந்திய அரசாங்க உடலெல்லாம் ஒட்டிக்கொண்டு.

அந்த அசிங்கத்தை, "பாப்பரசர் வாடிகனின் தலைவர் என்றால், அவரை தேர்ந்தெடுக்க மூன்று பேராயர்கள் இந்தியாவிலிருந்து சென்று வாக்களித்தனரே, அவர்கள் சுதேசிகளா அல்லது வாடிகன் பிரஜைகளா?" என, சுட்டிக்காட்டியு(கேட்டு)ள்ளார் குருமூர்த்தி.

எப்படியோ,

குருமூர்த்தி கோத்திரங்கள் மனித உரிமை பற்றி பேச வைக்க ஒரு மட தலைவர் காராகிருகம் செல்ல வேண்டியிருந்தது - அப்போது.

அவர்கள் மதச்சார்பின்மை பற்றி குரல் கொடுக்க வைக்க ஒரு மத தலைவர் தேவலோகம் செல்ல வேண்டியிருந்தது - இப்போது.

இப்படியே, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமத்துவம் பற்றியும் இவர்களை பேசவைக்கும் ஏதோவொன்று விரைவில் நடக்க, யாராவது யாகம் வளர்த்து, வேள்வி நடத்தி, சமஸ்கிருத மந்திரம் முழங்கியபடியே அதனுள் குதித்தால், அவர்களை நாம் பாராட்டலாம்.

Get Nandalaalaa atom feed here!

Thursday, May 05, 2005

வேதகால நீதிபதி!

டெல்லி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த ஒரு ஆண் ஊழியர், அங்கே இரவுப்பணியிலிருந்த செவிலியின் கண்ணை தோண்டியெடுத்து, பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டு வாழ்வளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூற, அதை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்டுள்ளார்.

அப்பெண் இதை ஏற்க மறுத்துவிட, ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, அப்பெண் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தால், தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்குமா?

இந்திய குற்றவியல் சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

அவ்வாறு இல்லையெனில், நீதிபதியின் செய்கை சரியா?

இவர் சட்டம் படித்து வந்தவரா, இல்லை வேதம் படித்து நீதிபதியானாரா?

Get Nandalaalaa atom feed here!

Wednesday, May 04, 2005

நாட்டு நடப்பு - 001

கோவிந்தா ராக்கெட்டு?


நாளை ஏவப்பட உள்ள கார்டோசாட்-1, ஹாம்சாட் செயற்கை கோள்களின் மாதிரியை திருப்பதி பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு நடத்தியுள்ளார் 'இஸ்ரோ' தலைவர் மாதவன் நாயர். இது அவர் எந்த குறிப்பிட்ட மத கடவுளின் பக்தராக இருப்பதற்கோ, இதற்கு மேலும் வேறு எந்த கூத்தையும் அடிப்பதற்கோ யாரும் ஆட்சேபிக்க முடியாதுதான். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போர்வையின் கீழ், அதுவும் மிக முன்னேறிய தொழில் நுட்ப மையத்தின் தலைவர் இதை செய்தது ஆட்சேபனைக்குறிய ஒன்று.

ராணுவமே ஆயுத பூஜை கொண்டாடும் அவலம் கொண்ட நாட்டில் இது சாதாரண ஒன்றாகவே பலராலும் பார்க்கப்படும் என நினைக்கிறேன்.

பழைய எம்.ஜி.ஆர் படம் ஏதோ ஒன்றில் வரும் கதாகாலச்சேபம் போலமைந்த பாடல் காட்சியில், இந்தியா நிலவுக்கு ஏவுகனை அனுப்பும் கதையை பாடுவார். அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

ஏவுகனை மீது கோ மூத்திரம் தெளிக்கிறார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

கோர்ட்டில் கீரிப்பட்டி


தேர்தல் வழிமுறையை கேலிக்கூத்தாக்கி, சாதி ஆதிக்க வெறியை வெளிப்படுத்திய கீரிப்பட்டி பிரச்சினை, இப்போது மற்றொரு ஜனநாயக தூணாக வர்ணிக்கப்படும்/நம்பப்படும் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. கடந்த தேர்தலில் பிறமலைக் கள்ளர்களால் நிறுத்தப்பட்டு, வென்ற அழகுமலை தனது பதவியை ராஜினாமா செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த, பூங்கொடி வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கு விசாரனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யும்போது அரசு/அதிகார வர்க்கத்தின் உள்நோக்கம் வெளிப்படும்.

இன்னொன்று, அனேகமாக சுதந்திர இந்தியாவில் தேர்தலில் தோற்றவர், வென்றவரை பதவியில் (இருந்து நீக்க வேண்டியல்லாமல்) நீடிக்க வேண்டி வழக்கு தொடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்க கூடும்.

இதுவரை இரண்டு (தி.மு.க, அ.தி.மு.க) அரசுமே இப்பிரச்சினையை சரியான முறையில் கையாளவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின் தனி அதிகாரியை நியமித்து பஞ்சாயத்து பணிகள் தேக்கமற நடக்க உதவியுள்ளது.

நீதிதுறை தலையிட்டு அரசுக்கு அழுத்தம் தந்தால், கீரிப்பட்டியிலும், மற்ற மூன்று கிராமங்களிலும் தொடரும் அவலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழக்கூடும். பார்க்கலாம்.

சிதம்பர ரகசியம்?


ஐடிசி நிறுவனத்திடமிருந்து 803 கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரியை வசூலிக்க நிதியமைச்சகம் பிரப்பித்த ஆணையை, திரும்ப பெரும் படி தேஜக கூட்டணி தலைவர்கள் 'இருவர்' கடிதம் எழுதியதாக திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் நிதி அமைச்சர் சிதம்பரம். யார் அந்த இருவர் என்ற விவரத்தை அவர் இன்னும் வெளியிடவில்லை.

அந்த பெயர்களை வெளியிட கோரி நேற்று ஆளும் தரப்பு எம்.பி க்களே நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளனர்.

சிதம்பரத்தின் நேர்மை இதற்கு முன்னும் பல முறை அடிபட்டுள்ளது. பத்திரிக்கைகளின் தயவால் திருவாளர் தூயவர் பிம்பத்தை இன்னும் காத்து வருகிறார்.

ஒரு வேளை சிதம்பரம் ஐ.டி.சி யுடனான பேரம் படிந்து, அந்த பெயர்களை வெளியிடவில்லை யென்றால், பொது நல வழ்க்கின் மூலம் அதை வெளிக்கொணரலாம்.

அப்படி முயல்பவர்களையும் ஐடிசி வளைக்க தயங்காது. பணநாயக நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா வென நாமும் இதை மறந்துவிட்டு அடுத்த கதையை பார்க்க வேண்டியது தான், வழக்கம் போல.

சதிராடும் சாதி?


மஹாரஷ்டிர மாநில அரசின், மது அருந்தும் விடுதிகளில் நடனமாடுவதை தடை செய்யும் ஆணை 75,000 பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியிருக்கிறது.

இந்த தடையை சரியானது என கொண்டாடும் கலாச்சார காவலர்கள், இந்த பெண்களின் வருமானத்திற்கான அடுத்த வாய்ப்பு பாலியல் தொழில்தான் என்பதை எல்லாம் கருத்தில் எடுக்கவில்லை. தேவரடியார் வழ்க்கமிருந்த ஒரு சமூகத்திற்கு இது தவறாக கூட தெரியாதிருக்கலாம்.

என் கவலையெல்லாம் எய்ட்ஸ் நோயில் இந்தியா முதல் நிலையை அடைய இன்னும் சில ஆயிரம் பேர்களே தேவையென்ற நிலையில், ஏற்கன்வே இந்திய ராணுவமும் தன் பங்குக்கு எய்ட்ஸ் பரப்பலில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்போது இவர்களையும் அதற்கான் சூழலுள் அனுப்புவது குறித்தே. மேலும் பாலியல் தொழிலாளரை விட நடன மங்கையை குறைவாக அவமதிக்கும் சமுதாய அமைப்பு நம்முடையது.

இப்பெண்களுக்கான அமைப்பின் தலைவர் வர்சா கலே, மராட்டிய துனை முதல்வர் பாட்டில் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். உயர் சாதியாரை திருப்திபடுத்தவே, அதே உயர்சாதியை சேர்ந்த பாட்டில், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ள இத்தொழிலை, ஒழிக்க விரும்புவதாக.

உண்மையில் இந்த பெண்கள் மீது பரிதாபப்பட்டு அரசு இம்முடிவை கைக்கொண்டிருப்பின், அவர்களின் வருமானத்திற்கு மாற்று வழியை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றின பேச்சே இதுவரை இல்லை.

இது மாதிரி அடி நிலை தொழில் மட்டும் தான் இட ஒதுக்கீடு இல்லாமலே கீழ் சாதியினருக்கு கிடைத்து வருகிறது. அதிலும் சாதி சதிராடினால் என்ன தான் செய்வது.

Get Nandalaalaa atom feed here!

Monday, May 02, 2005

ஒரு விபத்து.

நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த வியாழன் அன்று மதியம் அலுவலக பணி நிமித்தம் உடன் பணிபுரியும் இருவர், அருகாமையில் உள்ள நகரமொன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கு செல்ல வேண்டிய அலுவல் பணி எதுவும் இருக்கவில்லையாயினும், செல்லுமிடத்தில் வசிக்கும் நண்பரொருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வேண்டி, அவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, பயணத்தில் நானும் இறுதி நேரத்தில் இணைந்து கொண்டேன்.

பயணம் தொடங்கியது. வழியில் சிற்றுண்டிக்காக, நெடுஞ்சாலையிலிருந்து விலகி, ஒரு உணவகத்தில் நிறுத்தினோம். அது வரை நான் தான் வாகனமோட்டி வந்தேன். ஆனால் நாங்கள் செல்லவேண்டிய அந்த நகரம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. உடன் வந்தவரோ மாதமிருமுறை அங்கு சென்று வருபவர். ஆகவே பயணத்தை மீண்டும் தொடங்கிய போது அவரை வாகனத்தை செலுத்த சொல்லிவிட்டு, நான் அருகில் அமர்ந்து கொண்டேன்.
பின்னிருக்கையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர். இவர் எங்கள் நிறுவனத்தில் இணைந்து ஒரு மாதமே ஆகியுள்ளது.

ஐந்து நிமிட பயணத்தில் நெடுஞ்சாலையை மீண்டும் தொட்டோம். அந்த சாலையில் சாதாரணமாக வார இறுதியில் அதிகமாக இருக்கும் போக்குவரத்து, அன்று வார நாள் ஆனதால் அவ்வளவாக இல்லை.

எங்கள் வாகனம் முன், பின், பக்கவாட்டில் எந்த வாகனமும் இல்லாது தனியே செல்வதால், நண்பர் 110 மைல் வேகத்தில் வாகனத்தை செலுத்தி சென்றுகொண்டிருக்கிறார். அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 90 மைல் தான்.

இன்னும் 1 மைல் தூரத்தில் நகரினுள் செல்லும் மேம்பாலத்தினுள் புக வேண்டியிருந்ததால். நண்பர் வேகத்தை குறைத்து ஓடை மாற்றி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தார். அப்போது அது நிகழ்ந்தது.

நேரே சென்று கொண்டிருந்த வாகனம் ஏதோ ஒரு விசையால் தள்ளப்பட்டது போல் பக்கவாட்டில் சாய ஆரம்பித்தது. சாய்ந்த நிலையிலேயே சில வினாடி சென்ற பின் கவிழ்ந்தது. நடப்பதை அவதானிக்கவோ, என்ன செய்வதென்பது குறித்து முடிவெடுக்கவோ முடியவில்லை. செயலற்று நாங்கள் வாகனத்தினுள் இருக்க, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுபட்டு தன் விருப்பம்போல் சாய்ந்த நிலையிலேயே சிறிது தூரம் சென்றுவிட்டு பின் தலைகீழாய் கவிழ்ந்தது.

வாழ்வின் இறுதி நிமிடங்களை உணர்ந்தேன்.

பக்கவாட்டில் சாய்ந்தபோதே கதவில் இருந்த காற்றுப்பை வெளியே வந்து விட்டது. அது என்னை முழுதாக தாங்கி சற்று முன் புறமாகவும் வாகனத்தின் நடுப்புறம் நோக்கி தள்ளியது. இருக்கை பட்டை பின் புறமாய இழுத்து மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது.

வாகனம் தலை கீழ் ஆன நேரத்தில் முன் பக்க காற்றுப்பையும் விரிய நான் இருக்கையுடன் சேர்த்து அழுத்தப்பட்டேன். பலத்த சப்தத்துடன் முன் புற கண்ணாடி உடைந்து மேலே சிதறுவதை உணர முடிந்தது.

பின்னிருக்கை நபரின் ஓலமும் இப்போது கேட்டது. அவர் இருக்கை பட்டையை அணிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

அதற்கு பின்னர் சற்றேறக்குறைய ஐந்து-பத்து வினாடி நேர அளவிற்குள் வாகனம் இரு முறை நிமிர்ந்து மறுபடியும் கவிழ்ந்தது. இதை வாகன அசைவை கொண்டே அவதானிக்க முடிந்தது. பார்வையை முற்றாக காற்றுப்பை மறைத்து விட்டிருந்தது.

இப்போதும் வாகனம் முன்னோக்கி இழுத்து செல்லப்படுவது நிற்கவில்லை. மூன்றாம் முறையாக கவிழ்ந்து மீண்டும் நிமிரும் போது வாகனம் எதனுடனோ மோதுவதும், அதனால் முன்னோகி செல்வது எதிர் உந்துதலுடன் நிறுத்தப்படுவதும், என் உடல் முழுவதுமாக காற்றுப்பைக்கு எதிராய் அழுத்துவதும், இருக்கை பட்டை கடினமாக பின்னிழுப்பதும் உணரமுடிந்தது.

பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் வாகனம், அதன் மேல் புறமாக எனது இருக்கையும். அதன் அருகிலிருக்கும் கதவும். இருக்கை பட்டையுடன் ஒரு மாதிரியான தொங்கிய நிலையில் நான். பக்கவாட்டு காற்றுப்பை எப்போது காற்றிழந்து, சுருங்கியது என்று தெரியவில்லை.

முன் புற காற்றுப்பை வெளிப்புறமாக- கதவை நோக்கி என்னை தள்ளிய நிலையில் வைத்திருக்க வாகனத்தின் உட்புறம் என்னால் பார்க்க இயலவில்லை. கதவின் கண்ணாடியும் உடைந்துவிட்டிருந்தது. மேலிருந்து சூரிய ஒளி முகத்தில் சுட்டு இன்னும் நான் இறக்கவில்லை என்பதை உணர்த்தியது.

எப்படி மீள்வது, என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஒன்றும் தோன்றவில்லை. உடனிருந்த இருவர் நிலையும் என்னவென்று தெரியவில்லை. இரண்டு பேரின் பெயர்களையும் உரத்து அழைத்தேன். பதிலில்லை. என் குரலிலும் அதிக சப்தம் வராததை உணர்ந்தேன்.

உடனடியாக வெளியேற வேண்டும். பின் இருவரின் நிலை அறிய வேண்டும். அவர்களுகு ஏதேனும் உதவ முடியுமா என பார்க்க வேண்டும்.

ஒரு மாதிரி தொங்கிய நிலையிலேயே, முன்னும் பின்னும் உடலை அசைத்து காலை எதன் மீதோ ஊன்றி, மிகுந்த முயற்சிக்கு பின் இருக்கை பட்டையை விடுவித்து, உடலை கதவின் சன்னல் வழியே வெளியே செலுத்தி, ஒரு வழியாய் எழுந்து நிற்பது போன்ற நிலையை அடைந்தேன். பிறகு கையை வாகனத்தின் வெளிப்புறம் ஊன்றி, அப்படியே உந்தி முழுவதுமாக வெளிக்கிட்டு விட்டேன்.

எங்கள் வாகனம் சாலையிலிருந்து விலகி விளிம்பிலிருக்கும் அறிவிப்பு பலகை கம்பத்தில் மோதி நிற்பதை அறிய முடிந்தது. பின்புற கதவின் சன்னல் வழியே நோக்கிய போது, அங்கே மடங்கிய நிலையில், ஒரு கால் மேலே உயர்ந்தும், மற்றொரு கால் இருக்கைக்கு அடியிலுமாக, உடல் அடியிலுமாக பின்னியது போல் கிடந்தார் தாய்லாந்து நபர்.

ஓட்டி வந்த நண்பரின் ஒரு கை மட்டும் காற்றுப்பைக்கும் இருக்கைக்கும் இடையில் பிதுங்கிய நிலையில் தெரிந்தது. தகுந்த உதவியின்றி இவர்களை மீடபது இயலாது என்பதும் புரிந்தது. அவர்களை பெயரை கூறி விளித்தும் எந்த பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை. அவர்களுக்கு சுய நினைவு இல்லை என்பது புரிந்தது. எனக்கு கவலை அதிகரிக்க தொடங்கியது. வாகனத்தில் மேலே இருந்த படியே செயலற்று பார்த்து கொண்டிருந்தேன்.

இப்போது மூன்று வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டு, அதிலிருந்தவர்கள் எங்களை நோக்கி வரத்துவங்கினர். அதிலொருவர் செல்பேசியில் விபத்து குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்தார். மற்ற இருவர் வாகனத்தில் இருந்து கீழே இறங்க எனக்கு உதவினார்கள்.

இறங்கிய பின் வாகனத்தின் முன் புறம் செல்ல எத்தனித்தேன். இடது காலை நகர்த்துவதற்கு மிகுந்த சிரமமாய் இருந்தது. காலை பெரிய பாரமாக உணர்ந்தேன். பின்னந்தலையும் கழுத்தும் எதனுடனோ வேகமாக முட்டியது போல் ஒருவித அதிர்வுடனேயே இருந்தது.

சிரமத்துடனே வாகனத்தின் முன் புறமாக சென்று, கண்ணாடி இருந்த இடத்தின் வழியே பார்த்தேன். வாகனத்தை ஓட்டிவந்த நபர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே தரையை ஒட்டி சலனமற்ற நிலையில் சாய்ந்து கிடப்பது தெரிந்தது. முகத்தில், தலையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தலை காற்றுப்பைக்கு வெளியே இருந்ததால் சுவாசிக்க சிரமிருக்காது என புரிந்தது.

அவரை நெருங்கி அமர முயற்சிக்க, இடது காலை மடக்க முடியவில்லை. வலி உச்சத்தை தொட்டது. அவரை வெளியே எடுக்க உதவும்படி அருகிலிருந்தவரிடம் சொன்னேன். அவர் அது தவறானது, மீட்பு குழுவினர் வந்து தான் செய்யவேண்டும் என கூறினார். அது தான் சரியான முறை என தெரிந்த போதும் எனக்கு ஆதங்கமாகவே இருந்தது. கண் முன்னே அடிபட்டு கிடக்கும் மனிதனுக்கு உதவ முடியாத கையறு நிலை.

நான் இறங்க உதவி செய்தவர் தண்ணீர் புட்டியை கொடுத்தார். அப்போது தண்ணீர் அருந்துவது தேவையாக இருந்தது. ஆனால் மன நிலை இல்லை. இருவரையும் மீட்பது ஒன்றே குறியாக இருந்தது. மற்றொருவர் என்னருகில் வந்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், வெகு விரைவில் அவர்கள் வந்து விடுவார்கள் என்றும் கூறினார். வேறு யாருக்காவது தகவல் தர வேண்டுமா என வினவினார்.

அவரிடம் எங்கள் அலுவலக எண்ணை கூறி முடிந்தால் தகவல் தெரிவிக்குமாறு வேண்டினேன். அவர் நான் கூறிய எண்ணை ஒற்றி என்னிடமே பேசியை தந்துவிட்டார். முன் அலுவலக பணியாளப்பெண்ணிடம் பேசி சுருக்கமாக தகவல் தெரிவித்து சற்று நேரம் கழித்து என் கைபேசியில் அழைக்கும் படி கூறி முடித்தேன்.

அந்த ஊரில் நான் சந்திக்கவிருந்த நபரின் தொலைபேசி எண் நினைவில் இல்லை. கைபேசியில் அவர் எண் உள்ளது, ஆனால் கைபேசி கையில் இல்லை, வாகனத்தின் உள்ளே மாட்டிக்கொண்டது.

அப்போது ஒருவர், விபத்துக்குள்ளான வாகனத்தின் அருகில் நிற்க வேண்டாம், தீப்பற்றிக்கொள்ளும் என்று கூறி பீதியை கிளப்பினார். அதை கேட்ட ஓரிருவர் விலகி செல்ல ஆரம்பித்தனர். என்னையும் விலகி வந்து விடும்படி கூறினார் அருகிலிருந்தவர். நான் அங்கே நின்று செய்யக்கூடியது எதுவுமில்லை. இனி மீட்பு குழுவினர் வந்து சேர்ந்து தான் எதுவும் செய்யமுடியும் என்ற உண்மை புரிந்தாலும் என்னால் அங்கிருந்து அகலமுடியவில்லை.

எப்படி விபத்து நடந்தது என்று வினவினார் ஒருவர். மற்றொருவர், வாகன ஓட்டி குடித்திருந்தாரா என் கேட்டார். வேறொருவர் உடன் வந்தது எத்தனை பேர், உறவினரா நண்பர்களா பெண்கள் குழந்தைகள் உண்டா என்றெல்லாம் கேட்க துவங்கினர். அவர்களுக்கு பதில் பேசும் மன நிலை எனக்கில்லை. உடனடியாக உதவி வந்து சேரவேண்டும் என்ற தவிப்பு மாத்திரமே எனக்குள் இருந்தது.

சற்று தொலைவில் நெருக்கடி நேர ஒலிப்பான், உதவி வாகனங்களின் வருகையை கூறியது. சற்று நம்பிக்கை கூடியது. ஆனால் சோதனையாக வாகனங்கள் நகரினுள்ளிருந்து வருவதால் எதிர் திசையில் சாலையின் மறுபுறத்து ஓடையில் சென்றது. விபத்து நடந்த இடத்திலிருந்து 3 மைல் தொலைவில் தான் இவ்வாகனங்கள் திரும்பி இவ்வோடைக்குள் நுழைய முடியும் என்றார் அருகிலிருந்தவர். அப்படியென்றால் இன்னும் 3 மைல் சென்று பின்னர் திரும்பவும் 3 மைல் வர வேண்டும். எப்படியும் 6 நிமிடத்திற்கு மேலாகும் என்பதை உணர்ந்த போது அயர்ச்சி அதிகமானது.

நேரம் செல்ல செல்ல என் இடது காலில் எடை அதிகரிப்பது போல் உணர்ந்தேன். வலியும் மெல்ல கூடிக்கொண்டிருந்தது. மேலும் இப்போது இடது காலை தரையில் ஊன்ற முடியவில்லை. உயர்த்தியே வைத்திருந்தேன். இப்போது பின்னதலையிலிருந்து கழுத்து, முதுகும் வலது கையும் வலிக்க ஆரம்பித்திருப்பது தெரிந்தது.

மேலும் சில மீட்பு வாகனங்கள் எதிர் ஒடையில் செல்ல தொடங்கியது. அவற்றில் இரண்டு நாங்கள் இருந்த இடத்திற்கு எதிர்புறம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்து சிலர் சாலையை குறுக்காக கடந்து எங்களை நோக்கி வந்தனர். அவர்கள் சுமப்பு படுக்கை, சிறு பெட்டிகள் ஆகையவைகளை தாங்கி வந்தனர். உதவி நெருங்கி விட்டது என்ற நினைப்பே நம்பிக்கை தந்தது.

மருத்துவ குழுவினர் வாகனத்தை நெருங்கி சோதிக்க தொடங்கினர்.

அவர்களில் காவல் துறை ஆள் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் விபத்தை பார்த்தவர்கள் யார் என கேட்க, அவர்கள் வாகனத்தில் பயணித்தவர் என என்னை சுட்டினர்.

இதை கேட்ட மருத்துவ குழுவினர் இருவர் என்னை நெருங்கி, எனக்கேற்பட்ட காயங்கள் குறித்து விசாரிக்க துவங்கினர். நான் எனக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறி மற்ற இருவரையும் மீட்க சொன்னேன். அதை மற்றவர்கள் செய்கிறார்கள் எனவும் எனக்கு என்ன என்று கேட்பதிலேயே குறியாகவும் இருந்தார். இது எனக்கு எரிச்சலை மூட்டியது. நமக்கு உதவுபவர்களிடமே எரிச்சல் கொள்ளவைக்கும் விந்தையான நிலை.

எனக்கு சிறு கீறலும் இல்லை, மற்றவர்கள் தான் நினைவற்று வாகனத்தினுள் சிக்கியுள்ளனர். ஆகவே முதலில் அவர்களுக்கு உதவுங்கள் என்று சற்று கடுமை கலந்து கூறினேன். ஆனலும் அவர் மற்றவர்கள் அதை தான் செய்வதாகவும், எனக்கு முதலுதவி அளிப்பது தன் கடமையென்றும், அதற்கு நான் உதவ வேண்டுமென்றும் பணிவுடனே கூறினார். நான் மீண்டும் மீண்டும் எனக்கு ஒன்றும் இல்லை என்றே கூறிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் எனக்கு எந்த பாதிப்பும் இருப்பதாகவும் தெரியவுமில்லை. வலிகளெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றின.

இப்போது எதிர் ஓடையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் வந்து சேர துவங்கின. தீயணைப்பு, மருத்துவ உதவி, காவல் வாகனம் உள்ளிட சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சேர்ந்தது. அதிலிருந்து 30 முதல் 40 வரையிலானவர்கள் இறங்கி சாய்ந்து கிடந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.

மீட்பு குழுவின் அதிகாரி ஒருவர், சூழலை பார்வையிட்டு மீட்பு பணி குறித்து கட்டளைகள் பிறப்பிக்க துவங்கினார்.

அவ்விடத்தில் பரபரப்புடன், முன்னெழுதப்பட்ட கதியில் பலர் இயங்க தொடங்கினார்கள். இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என நான் சற்றே ஆசுவாசமடைந்தேன்.

முன்னர் என்னை சூழ்ந்த மருத்துவ பணியர் இன்னும் என்னருகிலேயே நின்று கொண்டிருந்தார்கள். இப்போது அதில் ஒருவர் என் இடது காலின் காலணி எங்கே எனக்கேட்டார். அப்போது தான் பார்த்தேன் என் இடது காலில் காலுறை மட்டுமே இருந்தது. காலணியைக் காணவில்லை. வாகனத்தினுள்ளே விழுந்திருக்க கூடும். அல்லது வாகனத்தின் மேலிருந்து இறங்கும் போது பிரிந்ததா எனவும் தெரியவில்லை.

காலை இப்போது தரையில் நன்றாக ஊன்றியிருந்தேன். வலியும் இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் காலை நகர்த்த முயன்றபோது முடியவில்லை. இடது கால் உணர்வற்ற நிலையை அடைந்துவிட்டிருந்தது.

இதை சொன்னதுமே, சுமக்கும் படுக்கையில் என்னை படுக்கவைத்து மேலும் இருவரை துணைக்கழைத்தனர். என் கழுத்தில் ஒரு பட்டை கட்டப்பட்டது. பின்னர் என் கால் சட்டையை கத்தரிக்கோல் கொண்டு வெட்ட முற்சித்தார் ஒருவர். அந்நிலையிலும் புதிதாக வாங்கி, அன்று தான் முதலாய் அணிந்த கால் சட்டையை காக்க வேண்டி, நானே கழட்டிவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்னை படுத்த நிலையிலைருந்து எழவிடாமல் செய்து, கால் சட்டையை வெட்டி விட்டனர். மற்றொருவர் என் இடது கையில் ரத்தநாளத்தை ஊசியால் தேடி வலிக்கச்செய்தார். இதற்குள் எங்கெங்கே வலிக்கிறது என ஒருவர் கேட்க துவங்கினார்.

இன்னும் என் சக பணியாளர்கள் குறித்த கவலையே எனக்குள் இருந்த படியால் நான் அவர்கள் நிலை பற்றியே விசாரித்தேன்.

இப்போது ஒரு படுக்கையை இருவர் சுமந்து செல்வது, எனக்கு வலப்புறமாக தலைக்கு மேல், தெரிந்தது. அது வாகனம் ஓட்டி வந்தவர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். அவருக்கு சுவாசம் இருப்பதாகவும் ஆனால் சுய நினைவற்று இருப்பதாகவும் தெரியவந்தது. தலையை திருப்ப முடியாத நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் என்னால் அங்கு நடக்கும் மற்ற எதையும் பார்க்க முடியவில்லை.

அவரை ஏற்றிக்கொண்ட வாகனம் புறப்பட்டு செல்லும் சப்தம் கேட்டது.

பின் இருக்கையில் அமர்ந்து வந்தவர் சற்று கடினமான முறையில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், மீட்க சிறிது நேரமாகலாம் என்றும் சொன்னார்கள். அவருக்கும் சுவாசம் இருப்பதாக அறிந்ததும் சற்று நிம்மதி அளித்தது.

இதற்கிடையே ஒரு காவலர் என் தலைக்கு அருகே அமர்ந்த நிலையில், நான் நலமாக இருப்பதாகவும், மற்ற இருவருக்கும் பெரிய ஆபத்து எதுவுமில்லை என்றும் கூறினார். அவர் புன்சிரிப்புடனும் கனிவுடனும் பேசி எனது பெயர், சக பணியாளர் பெயர்கள் விபத்து பற்றிய விவரங்களை என்னிடம் கேட்க துவங்கினார்.

நான் பதில் சொல்ல தொடங்க அனைத்தையும் குறித்துகொள்ள தொடங்கினார். நான் பேசுவதை சிறு ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டனர்.

இப்போது கையில் ஊசி சரியாக குத்தப்பட்டு அதில் திரவம் நிரம்பிய உரை பொருத்தப்பட்டிருந்தது. எனது படுக்கை இருபுறமும் சமமாக ஒரே நேரத்தில் உயர்த்தப்படுவதை உணர்ந்தேன். முன்னும் பின்னுமாக இருவர், பக்கவாடில் மருந்து உறையை உயர்த்தி பிடித்த படி ஒருவர், மறுபுறம் ஒருவர் என நான்கு பேருடனான என் முதல் பயணம் சுய நினைவுடனே துவங்கியது.

பிறகு ஒரு வாகனத்தினுள் அதிக அதிர்வின்றி செலுத்தப்பட்டேன். நால்வரும் எனக்கு இருபுறமும் அமர்ந்து கொள்ள, கதவு சாத்தப்பட்டது. வாகனத்தினுள்ளே குளிர்ச்சியை இதமாக உணர்ந்தேன். வாகனம் மெல்ல ஊரத்தொடங்கியது.

சற்று நேரத்தில் உடம்பில் வலி அனைத்தும் குறைந்ததுவிட்டிருந்தது. ஆனால் மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக உணர்ந்தேன். பின் கழுத்தில் வலி வெடிப்பதைப்போல் தொடங்கி முதுகுத்தண்டில் பாய்ந்து பின் இரண்டு கைகளுக்கும் பரவுவதை உணர முடிந்தது. அதை சொல்ல முயற்சிக்கும் போது கண்கள் இருண்டது. பிறகு நினைவிழந்தேன்.

மூக்கில் சொருகப்பட்ட குழாயுடன், வெள்ளை விரிப்பு வயிறு வரை போர்த்தியிருக்க, வயிறு, மார்பிலிருந்து இணைப்புகள் கொடுக்கப்பட்டு பக்கத்தில் ஒரு சிறிய திரை மினுக்கிக்கொண்டிருந்தது.

கண்விழித்தபோது இருந்த குழப்பம் தீர்ந்து, மருத்துவமனை சூழல் புரிபட சற்று நேரமானது.

இடுப்புக்கு மேல் 30 டிகிரி சாய்வாக படுக்கவைக்கப்பட்டிருந்த எனக்கு நேர் எதிரே ஒரு கண்ணாடி திரையும், அதற்கப்பால் ஒரு கணியும், அதன் முன்னால் அமர்ந்து தொலைபேசியபடி ஒரு பெண்ணும் தெரிந்தனர்.

இப்போது பின் கழுத்தில் வலி அதிகமாக இருந்தது. உடலை அசைக்க முடியாதபடி படுக்கை உடன் நான் பிணைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன். இடது கையினுள் ஏதோ உறுத்தியது. சற்று நேரத்தில் அது ஒரு அழைப்பு மணிக்கான சொடுக்கி என்பதை உணர்ந்தேன். அதை அழுத்தினால் எதிரே தொலைபேசிக்கொண்டிருக்கும் பெண் எழுந்து வரக்கூடும். அதை அழுத்த எத்தனிப்பதற்குள் அந்த பெண் தொலைபேசியை விட்டுவிட்டு, அறைக்கதவை திறந்து உள்ளே பிரவேசித்தார்.

முகத்தில் சிரிப்புடன் என்னருகில் வந்து என் பெயரை குறிப்பிட்டு எப்படி உணர்கிறேன் என வினவினார். என் பதிலை எதிர்பார்க்காமல் என் படுக்கை அருகிலிருந்த தொலை பேசியில் மருத்துவரை அழைப்பதை கவனித்தேன். அருகிலிருந்த திரையை கவனித்தபடி என் இடது கையை மெல்ல பற்றி எல்லாம் சரியாகி விட்டது என்று புன்னகையுடன் கூறினார். பின்னர் அவர் குனிந்து கட்டிலுக்கு அடியில் எதையே பார்த்து விட்டு, மீண்டும் என்னை பார்த்து புன்னகைத்தார்.

சற்று நேரத்தில் மேலும் இரண்டு பெண்கள், அதில் ஒருவர் மருத்துவர், அறைக்குள் வந்தனர். அதில் மருத்துவர் முதல் பெண் செய்தது பொலவே என் பெயரை விளித்து எப்படி உணர்கிறேன் என்ற அதே கேள்வியை கேட்டார். கண்ணை திறந்து மூடி சைகையாய் சொல்ல, அவரோ வாயை திறந்து பதில் சொல்லும்படி சொன்னார். சரி என்ற ஒற்றை வார்த்தையை உச்சரித்தேன். வாய் முழுவதுமாக உலர்ந்து இருந்தது. எங்காவது வலியிருக்கிறதா என அவர் கேட்க, கழுத்தில், பின்புறம் என ஒற்றை வார்த்தைகளாய் உச்சரித்தேன். பின்னர் அவர் மற்ற பெண்ணிடம் ஏதோ சொல்ல அவர் மூக்கிலிருந்த குழாயை அப்புறப்படுத்த தொடங்கினார். அதே நேரம் மருத்துவர் போர்வையை விலக்கி இடுப்பின் கீழ் ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்தினார். மூக்கிலிருந்த குழாய் அகற்றப்படும் போது மிகுந்த வலியும், குமட்டலும் ஏற்பட்டது. பிறகு சிறிய கோப்பையில் ஏதோ ஒரு திரவம், பழச்சாறும் இல்லாமல் மருந்தும் இல்லாமல், ஒன்றை பருக கொடுத்தனர். மிகுந்த தாகமாக இருந்தும் கூட முழுவதும் அருந்த முடியவில்லை.

இப்போது சற்றே தூக்கம் கலைந்து தெளிவானது போல் உணர்ந்தேன்.

தலை கழுத்து இரண்டு தோள்கள் வரை இணைத்து ஒரு மாதிரியான கழுத்து பட்டை ஒன்று பொருத்தப்பட்டு, தலையை திருப்ப முடியவில்லை.

சக பணியர் இருவர் பற்றியும் அவர்களிடம் வினவினேன். அவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், விசாரித்து தகவல் தருவதாகவும் சொன்னார்.

எனக்கு மயக்கம் வந்தது மற்றும் என் நிலை குறித்து விளக்கம் கேட்டேன். கழுத்தில் பின்புறம் அடி பட்டிருப்பதாகவும், அது இருக்கையுடன் ஏற்பட்ட அழுத்தத்தினால் இருக்கலாம் என்றும் அதனாலேயே மயக்கம் வந்ததாகவும், அடிபட்ட இடத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை யாதலால் கவலை கொள்ள தேவையில்லை என கூறினார்.

இன்னும் இரண்டு நாட்கள் அசைவின்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மற்றபடி எனது இடது கணுக்கால் மூட்டு பிசகி உள்ளது. விபத்துக்கு பின் வாகனத்திலிருந்து குதித்தது, நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது, நடந்தது எல்லாம் சேர்ந்து கணுக்காலின் நிலை மோசமாகி இருந்திருக்கிறது.

மருத்துவமனை வந்தடைந்ததுமே, எல்லா சோதனகளும் செய்யப்பட்டு அதற்கான சிகிச்சைகள் முடிக்கப்பட்டு இப்போது தான் கண்விழித்துள்ளேன். நினைவற்ற நிலையில் சிகிச்சை முடிவடைந்தது ஒரு வகையில் நல்லதாகவே படுகிறது. இப்போதய மருத்துவ சிகிச்சை கண்கானிப்பில் வைத்திருப்பதே.

படுக்கையின் அருகில் சிறு மேசை மீது ஒரு பூங்கொத்து இருந்தது. அதை காண்பித்து உங்கள் நண்பர் வந்திருந்தார். வெளியே காத்திருக்கிறார். அனுப்புகிறேன் என கூறிவிட்டு ஏதேனும் தேவைப்பட்டால் அழைப்பு மணியை அழுத்தும்படியும், முதல் பெண் எனக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் சொல்லி, கண்ணாடிக்கப்பால் உள்ள கணி திரையில் நான் கண்கானிக்கப்படுகிறேன் என்பதையும் தெரிவித்து விடைபெற்றார்.

சற்று நேரத்தில் எனது பங்குதாரர் உள்ளே வந்தார். அவரின் சம்பிரதாய கேள்விகளுக்கு பின், மற்ற இருவர் குறித்தும் கூறினார். வாகனம் ஓட்டி வந்தவருக்கு முன் தாடையில் பலமான அடியும் தாடை எழும்பில் விரிசலும் ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான தேவை இருக்கலாம்.

பின்னால் அமர்ந்து வந்தவர் முற்றிலும் நினைவிழந்து இருப்பதால் அவரை இன்னும் தீவிர கவனிப்பில் வைத்திருக்கிறார்கள். இன்னும் அவருக்கான தொழிலாளர் காப்பீடு எடுக்கப்படவில்லை. இது குறித்தும் பங்குதாரர் கவலை தெரிவித்தார். ஆனால் இப்பொதய பிரச்சனை அவர் குணமுற்று தேறி வருவதேயன்றி மற்றவை எனக்கு பெரிதாக படவில்லை. அதிக பட்சமாய் அவரின் மருத்துவ செலவுகளை நிர்வாகம் ஏற்க வேண்டியது வரலாம்.

பயணத்தின் போது, தாய்லாந்து தொழிலாளி, பேச்சு அவரை பற்றி சென்றபோது, தனக்கொரு காதலியும் அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருப்பதை சொல்லி அவர்களின் படத்தையும் காட்டினார். அச்சமயத்தில் அது சாதரண விடயமே. ஆனால் இப்போது என் மனதில் அவர்களின் நினைவு அழுத்தியது. பங்குதாரரிடம், தொழிலாளரின் உறவினருக்கு இவ்விபத்து குறித்து தகவல் தரும்படி கூறினேன்.

மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் ஓட்டி வந்தவர் கண் முழித்துவிட்டதாகவும், சுய நினைவுடன் இருப்பதாகவும் கூறினார்கள். இன்னும் இரண்டொரு நாளில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படக்கூடும்.

சனிக்கிழமை காலை இரண்டு காவல் அதிகாரிகள் என்னை சந்தித்து, சில கேள்விகளை கேட்டு அதற்கான என் பதிலை பதிவு செய்து சென்றனர்.

என் கைபேசியையும், மடிக்கணியையும் பங்குதாரர் என்னிடம் சேர்ப்பித்தார். வாகனத்தை சீர் செய்ய அதிக செலவு பிடிக்குமென்றும், மாற்றாக சிறிது கூடுதல் பணம் செலுத்தி புதிய வாகனம் எடுத்துவிட முடியும் என்பதையும் விவாதித்தோம். மூன்று மாதத்திற்கு முன்பு தான் இந்த வாகனம் வாங்கப்பட்டது.

கைதொலைபேசியில் உள்ளூர் நண்பரை அழைத்தேன். வியாழனன்று எனக்காக காத்திருந்தவர், நான் வராமலிருந்ததை விட தகவல் சொல்லாததை பெரும் குறையாக சொன்னார். பின்னர் நிலமையை விளக்கிய வுடன், அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இந்த இரண்டு நாட்களாக அவர் பேச்சு துணை மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. மற்றபடி மருத்துவமனையில் படுக்கையில் அசையாமல், கழுத்தை திருப்ப முடியாமல் இருப்பது நரக வேதனையான ஒன்று.

இதுவரை என்னுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வரும் இரண்டு பெண்களும் என்றென்றும் எனது நன்றிக்குறியவர்கள். எனது ஒவ்வொரு அசைவுக்கும் அவர்கள் உதவி இன்றியமையாதது. அவ்வளவையும் இன்முகத்துடன் அவர்கள் செய்வது மிகுந்த பாராட்டுக்குறியது. அழைக்காவிட்டால் கூட அடிக்கடி தேவையை விசாரிப்பதும், புன்னகையுடனே எப்போதும் இருப்பதும் சாதாரண ஒன்றாக எனக்கு படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வாகனம் ஓட்டி வந்தவருக்கும், மற்றவருக்கும் அறுவை சிகிச்சை, அளிக்கப்பட்டது. முதலாமவர் (அறுவை சிகிச்சைக்காக தரப்பட்ட) மயக்க நிலையிலும், இரண்டாமவர் சுய நினைவு தப்பிய நிலையிலேயும் இருக்கின்றனர்.

மாலை வாகனம் ஓட்டி வந்தவரின் மயக்கம் தெளிந்துவிட்டது. தாடையில் அடிபட்டிருப்பதால், அவரால் பேசுவதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ, இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும்.

தாய்லாந்து தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாகவே நீடிக்கிறது. தாய்லாந்தில் அவரின் சகோதரரிடம் தொலைபேசி, தகவல் தெரிவிக்கப்பட்டது.

திங்கள் காலை (இன்று) மருத்துவ சோதனைகளுக்கு பின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டேன்.

இதற்கு முன்னும் சில விபத்துகளில் சிக்கியிருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும், விபத்து முடிந்த பின் தான், அப்படி ஒன்று நடந்ததே புரியும் வண்ணம் விரைந்து நடந்தவை. நடப்பதை உணரும் முன்னரே முடிந்து விட்டவை. ஆனால் இந்த விபத்தின் நிகழ்வு நேரம் நீண்டதால் மரண தருவாயை உணர வைத்தது.

விபத்து நேரத்தில் உதவிய நல்ல உள்ளங்கள், மீட்பு பணி குழுவினர், மருத்துவமனை பணியாளர்கள், தகவல் அறிந்து தொலைபேசி, நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.

இதை வாசிக்கும் அன்பர்களுக்கும் நன்றி.

இரண்டு சக பணியர்களும் மருத்துவ மனையிலிருந்து முழுமையாக குணமுற்று திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்க்கும்

- நந்தலாலா.